Alaioli
மனிதவள அமைச்சராக நியமனம்: பிரதமரின் நம்பிக்கைக்கு நன்றி – டத்தோ ஸ்ரீ ரமணன்

தி. கிரிஷன் 


புத்ராஜெயா டிசம்பர் 16 :


மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்பளித்ததற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தனது மனமார்ந்த நன்றிதனை டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


புதிய மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர்,  மலேசியா மதானி கொள்கையின் இலக்குகளுக்கு ஏற்ப நாட்டின் மனிதவள மேம்பாட்டு திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். நாட்டின் மனிதவளத்தை அதிக போட்டித்தன்மையுடனும் திறனுடனும் உருவாக்குவது இந்நியமனத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்தப் பொறுப்பின் மூலம் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நம்பிக்கையை வழங்கிய பிரதமருக்கு மீண்டும் தனது நன்றியை பதிவு செய்தார்.


பதவியேற்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், மனிதவள அமைச்சகத்தின் (KESUMA) உயர் அதிகாரிகளுடன் விரைவில் சந்தித்து, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மடானி மலேசியா சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய சமூகத்தையும் உள்ளடக்கிய அனைத்து மலேசியர்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற முழு அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை ஆற்றுவேன் என டத்தோ ஸ்ரீ ரமணன் உறுதியளித்தார்.


அதேவேளை, தாம் முன்னர் பொறுப்பேற்றிருந்த தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்திற்கும், அங்குள்ள அனைத்து பணியாளர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் குஸ்கோப் (KUSKOP) அமைப்பில் பணியாற்றிய காலப்பகுதியில், இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வலுப்படுத்த அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் தமக்கு முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

Leave a Comment
Trending News