(சத்யா பிரான்சிஸ்)
கப்பளா பத்தாஸ். ஏப்ரல் 7
84 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமையான கப்பளா பத்தாஸ் பழனியாண்டி தமிழ்ப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்க அமைப்புக்குழு இன்று அமைக்கப்பட்டது. இப்பள்ளியில் ஏறக்குறைய 3000 மாணவர்கள் படித்து சென்றுள்ளார்கள் என பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திக் தமது வரவேற்புரையில் கூறினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திக், பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து, மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் பினாங்கு கிளையோடு (பெர்த்தாமா) சேர்ந்து பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் அமைக்க முன் வந்தது.
நான் கடந்தாண்டு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இங்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைக்கப்பட வேண்டும் என விரும்பினேன். அதன் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் இன்று கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். பள்ளியின் வளர்ச்சிக்கு சிறந்த திட்டங்களைக் கொண்டு வர முன்னாள் மாணவர்கள் பெரிதும் விரும்பினர். முன்னாள் மாணவர்கள் தனித்தனியாக செயல்படுவதை விட ஒன்று சேர்ந்து ஒரு இயக்கமாக செயல்படுவது சிறந்தது என அவர் தமதுரையில் கூறினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ருத்திரன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்தார்.
பழனியாண்டி தமிழ்ப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ராஜமாணிக்கம், அன்று பள்ளியில் மேற்கண்ட நடவடிக்கைகளை விவரித்தார்.
இது ஒரு சரித்திர பூர்வமான நாள்.
பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருந்தது. முன்னால் மாணவர்கள் செல்வா, சங்கர் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் அமைக்கப்பட வேண்டும் என விரும்பினர். தலைமை ஆசிரியரோடு மேற்கொண்ட முயற்சியினால் இன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைகிறது என்றார் மலேசியத் தமிழ் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பினாங்கு மாநிலத் தலைவர் ச. வேலாயுதம்.
மலேசியாவில் உள்ள எல்லாத் தமிழ் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு முன்னாள் மாணவர் சங்கங்கள் அவசியம். தேசியப் பேரவையில் முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து கூட்டாகச் செயல்பட முயற்சி செய்வோம். இன்று தற்காலிகமாக ஒரு சங்கக் குழு பள்ளியில் அமைக்கப்படுகிறது என, மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் தேசிய பேரவைக்கு உதவித் தலைவரான ச. வேலாயுதம் தமதுரையில் கூறினார்.
சுப்பிரமணிய பாரதி தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வீரையா, ராமதாசர் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜூ நல்லமுத்து சங்கத்தின் வழி பள்ளிகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைச் செயல் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் சங்கப் புதிய தற்காலிக செயற்குழுவுக்குத் தலைவராக சீலன் ஆறுமுகம்,
துணைத் தலைவராக சதீஷ்குமார்,
செயலாளராக மகாதேவன் முனியாண்டி, துணைச் செயலாளராக தினேஷ் தர்மலிங்கம், பொருளாளராக திருமதி மஞ்சுளா கோபால், செயலவை உறுப்பினர்களாக ஜனார்த்தனம் வேலாயுதம், விக்னேஷ்வரி வாசுதேவன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.