Alaioli
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்கான மரியாதை முயற்சிக்கு பினாங்கு மாநில அரசுக்கு பாராட்டு -  பினாங்கு மஇகா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் உருக்கம்

மலேசியாவின் 5-வது பிரதமராகப் பதவியேற்று, நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் நலன்களுக்கும் பாரிய பங்களிப்புகளை செய்த துன் அப்துல்லா அஹ்மட் படாவி அவர்களின் சேவையை நினைவுகூரும் வகையில், பினாங்கு மாநில அரசு எடுத்துள்ள உயரிய முயற்சிக்கு தனது மனமார்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார் பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஜெ. தினகரன்.

“பாக் லா” என அன்போடு அழைக்கப்படும் துன் அப்துல்லா, தேசிய முன்னணி ஆட்சி காலத்தில், குறிப்பாக கப்பளா பத்தாஸ் பகுதிக்கும், மேலும் பரப்பாக பினாங்கு மாநில மக்களுக்கும்தான் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவராவார். அவரின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகள் மேம்பாடு, கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்கள் ஆகியவை இன்றும் மக்கள் மனங்களில் அக்கறையுடன் நினைவுகொள்ளப்படுகின்றன என்றார் டத்தோ தினகரன்.

பாண்டார் கசியா நெடுஞ்சாலைக்கு மாற்றாக, பத்து காவன் பகுதியில் அமைந்துள்ள சாலைக்கு “துன் அப்துல்லா அஹ்மட் படாவி சாலை” எனப் பெயரிடும் பினாங்கு மாநில அரசின் தீர்மானம், அவரது வாழ்க்கைச் சாதனைகளுக்கான மரியாதையைப் பிரதிபலிக்கின்றது. இது, துன் அப்துல்லாவின் பணியை ஒளிவீசும் ஓர் அடையாளமாகவும், வருங்காலத் தலைமுறைகளுக்குச் சிறந்த நினைவாகவும் அமையும் என்றார் அவர்.

மேலும், துன் அப்துல்லாவின் மரியாதைக்காக, பினாங்கு மாநிலக்கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட்ட மாநில அரசின் நடவடிக்கையை, மக்களாட்சிக்குத் தனியோர் வாழ்நாளில் அற்புதமான பங்களிப்பு செய்த நாட்டு நாயகனுக்குக் காண்பிக்கப்படும் உண்மையான மரியாதையாகக் கருதுவதாகவும் டத்தோ தினகரன் தெரிவித்தார்.

இதனுடன், பினாங்கு மாநில மஇகாவும், தனிப்பட்ட வகையிலும், இந்த அங்கீகார முயற்சிக்கு தனது முழுமையான நன்றியையும் ஆதரவையும் தெரிவிக்கின்றதாகவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Post Image

Leave a Comment
Trending News