218-வது காவல் தினத்தை முன்னிட்டு, கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சார்பில், இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க ஊக்குவிக்கும் வகையில், ஆன்மிகத்தையும் சமூக ஒற்றுமையையும் முன்னிலைப்படுத்தும் சிறப்பு இந்து சமய பிரார்த்தனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக அனாக் புகிட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆகாச மாரியம்மன் தேவஸ்தானத்தில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தில் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் (PKP) மற்றும் பயிற்சி பெறும் போலீசாரும் (PRP) கலந்துகொண்டனர். இந்நிகழ்வை மாவட்ட போக்குவரத்து விசாரணைத் துறைத் தலைவர் டி.எஸ்.பி. மனோகரன் சுப்பிரமணியம் தலைமையேற்று ஒருங்கிணைத்தார்.
மாநில அரசுத் துறைகள், முகாமைகள் சார்ந்த அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருடன், அனாக் புகிட் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
சமூக நலத்தின் அடிப்படையில், B40 வருமானக் குழுவைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்குச் செல்லும் 10 மாணவ, மாணவியர்களுக்குக் கல்விக் கட்டண உதவித் தொகையும் அளிக்கப்பட்டது. மேலும், சமூக சேவையில் ஈடுபட்ட போலீசாரும், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளும் நினைவுச்சின்னங்கள் மூலம் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, டி.எஸ்.பி. மனோகரன் மற்றும் ஏ.எஸ்.பி. நவேந்தரன் ஆகியோர் குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு உரைகள் ஆற்றினர்.
அவர்கள் தங்கள் உரையில்,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தவறான பாதையில் செல்ல விடாமல் கண்காணிக்க வேண்டும்,
இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி, சமூக ஒத்துழைப்புடன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்,இணைய மோசடிகளில் விழிக்கக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்,சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை மாற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது,
போலீசாரை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்ற செய்திகள் வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சி, சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்டதாகவும், இளைஞர்களை நேர்மையான பாதையில் நகர்த்தும் தூண்டுதலாகவும் அமைகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
