பிகேஆர் கட்சியின் தஞ்ஜோங் தொகுதி தலைவராக சமீபத்தில் தேர்வாகிய திரு குமரேசன் ஆறுமுகத்திற்கு பாராட்டு விழாவும், இரவு விருந்தும் இணைந்து நடத்தப்பட்டது. இந்த விழா பினாங்கு மாநிலம், அலாம் இன்டா பென்குயிட் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிகேஆர் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள், தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பினாங்கு துணை முதலமைச்சர் டத்தோ முகமட் அப்துல் ஹாமிட், மேயர் டத்தோ இராஜேந்திரன், பினாங்கு இந்திய வர்த்தக தொழிலியல் சங்க தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன், இந்து அறப்பணி வாரிய தலைவர் ராயர் மற்றும் முஸ்லிம் இயக்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் தலமையுரை ஆற்றிய பத்து உபான் சட்டமன்ற உறுப்பினரும், பிகேஆர் தஞ்ஜோங் தொகுதி புதிய தலைவருமான திரு குமரேசன், தமது உரையில், தஞ்ஜோங் தொகுதியில் மக்கள் வாழும் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவித்தார்.
அத்துடன், மாநில அரசு, உரிய இலாகாக்கள், மற்றும் தஞ்ஜோங் நாடாளுமன்ற உறுப்பினரும் முதலமைச்சருமான சௌ குவான் இயோவ் ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொகுதி தலைவர் பதவிக்காக தமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த குமரேசன், அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்தமாக செயல்பட்டு, தொகுதி மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம் என உறுதியளித்தார்.
இந்த நிகழ்வு, பிகேஆர் கட்சியின் உள்ளூர் மற்றும் மாநில அளவிலான ஒற்றுமையை எடுத்துக்காட்டியதுடன், புதிய தலைமையின் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தியது.