தமிழ்த்திரு மோகனன் பெருமாள் தலைமையிலான மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் மின்னல் பண்பலை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் டரிஷன், கார்த்திகேசன் , மற்றும் ஆதி. லட்சுமி ஆகியோர் வென்றனர் அதே வேளையில் இந்த போட்டிக்கான முன்னெடுப்பு எழுத்தாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த போட்டியின் இறுதி முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டதுடன் பரிசளிப்பு விழாவும் கோலாலம்பூரில் உள்ள ஆர்.டி.எம் அங்காசபூரி, பி.ரம்பி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதல் பரிசான மூவாயிரம் ரிங்கிட்டை திரு. டரிஷியன் ராஜா,
இரண்டாம் பரிசான இரண்டாயிரம் ரிங்கிட்டை திரு. கார்த்திகேசன் முருகையா,
மூன்றாவது பரிசான ஆயிரம் ரிங்கிட்டை திருமதி. ஆதி. லட்சுமி பெருமாள் ஆகியோர் வென்று கவனத்தை ஈர்த்தனர்.
வெற்றியாளர்களுக்கு தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நி சிங் அவர்கள், பசுமைச் சாலுவை அணிவித்து, மலர் மாலை சூட்டி, ரொக்கப் பரிசும் நற்சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.
இதனுடன்,
முதல் நிலை ஆறுதல் பரிசாக தலா 500 ரிங்கிட்டு பெற்ற ஏழு எழுத்தாளர்களுக்கும்,
இரண்டாம் நிலை ஆறுதல் பரிசாக தலா 300 ரிங்கிட்டு பெற்ற பத்து எழுத்தாளர்களுக்கும்
மின்னல் பண்பலையின் தலைவர் திருமதி ரோஹிணி சுப்ரமணியம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திரு. பெ.இராஜேந்திரன், திரு. மன்னர் மன்னன், திரு. ஞான சைமன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியத் தரத்தை உயர்த்தும் பணிகளை பாராட்டி, துணையமைச்சர் தியோ நி சிங் அவர்கள் 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கி தன்னார்வத்தை வெளிப்படுத்தினார்.
வெற்றிபெற்ற சிறுகதைகள் மின்னல் பண்பலையில் ஒலிபரப்பாகும் அதே வேளையில் அவை நூலாகவும் தொகுக்கப்பட்டு நாடு முழுவதிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும். இலக்கியம் மற்றும் வாசிப்பு பற்றிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறுகதைப் பயிலரங்குகளும் தொடர்ந்து நடத்தப்படும் என கூறப்பட்டது.
துணையமைச்சர் அவர்களுக்கு மலேசிய தமிழ் இலக்கியக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான திருமதி நல்லம்மா இராமசாமி அவர்கள் மலர் மாலை அணிவித்து கௌரவம் செய்தார்.
வானொலி பிரிவு இயக்குனரின் பிரதிநிதியாக நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய மொழி பண்பலையின் நிர்வாகி புவான் சல்பியா அவர்களும், அவருக்கு மலர் மாலை அணிவித்து கௌரவம் செய்த திருமதி சாந்தி ராஜமாணிக்கம் அவர்களும் விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழா, மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்பாற்றலை வானொலி வழியே மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நன்னோக்குடன் நடைபெற்றது. இதற்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற சிறுகதைப் பயிலரங்கிற்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்கிய மின்னல் பண்பலைத் தலைவர் திருமதி ரோஹிணி சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றியுடன் மலர் மாலை அணிவித்து கௌரவித்தார் சங்கத்தின் செயலவை உறுப்பினர் திருமதி நிர்மலாதேவி.
இவ்வாறாக ஒரு இலக்கியக் களமாக மலர்ந்த விழா, மலேசிய தமிழ் இலக்கிய உலகில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் மேற்பார்வை சிறப்பாக அமைந்தது.