ஐ.பி.எப் (இந்தியன் புரோகிரஸிவ் ஃபிராண்ட்) கட்சியின் நிறுவனர், தமிழர்கள் மத்தியில் “மலேசிய லூதர் கிங்” என அறியப்படும் புரட்சித் தலைவர் தான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் மறைந்து 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பினாங்கு ஐ.பி.எப் ஏற்பாட்டில் ஒரு சிறப்பு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பினாங்கு, பேராக், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஐ.பி.எப். தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு, தங்கள் வழிகாட்டியாருக்கு உளமார்ந்த புகழஞ்சலிகளைச் செலுத்தினர்.
பினாங்கு மாநிலத் தலைவர் ச. குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய பொருளாளர் மு. சுப்பிரமணியம், சிலாங்கூர் மாநிலத் தலைவர் இங்குரேசன், பேராக் மாநில தலைவர் வ. மாணிக்கம், நெகிரி செம்பிலான் மாநில செயலாளர் பெ. கணேசன், தமிழரசன், விலாயா மாநில செயலாளர் ஜொவெல், காபார் தொகுதி சேகர், தஞ்சோங் மாலிம் கோவிந்தசாமி, பினாங்கு ந. மகேந்திரன், எல்.ஆர். சிவபாலன், ஏ. தினகரன், வீ. சந்திரசேகரன், ஆ. அருள்மணி, திருமதி சாந்தி, திருமதி சரஸ்வதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் சமூக நீதி மற்றும் சமத்துவம் சார்ந்த செயல் திட்டங்கள், தன்னலமற்ற தலைமைப் பணிகள், இலட்சியக் கனவுகள், மற்றும் அரசியல் வாழ்வின் முக்கிய கட்டங்களை, பல தலைவர்கள் உரைகளின் மூலம் விலக்கிக் கூறினர். அவரது போராட்டம், அமெரிக்க சீர்திருத்தத் தலைவரான மார்தின் லூதர் கிங்கின் நெறிமுறைகளுக்கும் இலட்சியங்களுக்கும் இணையானதாகும் என்ற பாராட்டும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஆவலுடன், அமைதியான முறையில் குரல் கொடுத்த தலைவர்கள் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் ஒரு முக்கியப் பகுதியாக, பினாங்கு மாநில மகளிர் பிரிவின் முன்னாள் தலைவி திருமதி பொற்செல்வி ஏழுமலை அவர்களுக்கு, தான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு, தான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் வாழ்க்கைத் தத்துவங்கள் மற்றும் சமூகத்தின் மீது அவரது பங்களிப்பு இன்னும் குறையவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தான்ஸ்ரீ எம்.ஜி.பண்டியனுக்கான இந்த புகழஞ்சலி நிகழ்ச்சி ஐ.பி.ஃஎப் தேசியத்தின் பேராதரவுடன் பினாங்கு மாநில ஐபிஎப் தலைவர் ச.குமரேசன் அவர்தம் குழுவினரின் ஏற்பாட்டில் பட்டர்வொர்த் ஸ்ரீ அனந்த பவன் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.