Alaioli
சித்திரா பௌர்ணமி தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடமாற்றமா? அச்சத்தில் வியாபாரிகள்-குத்தகையாளர்கள்..!

டிகே.மூர்த்தி.மூர்த்தி,

ஈப்போ, ஏப்ரல் 8-வரும் ஜூன் மாதம் தெலுக் இந்தான் சுற்றுலாத் தலமான (சாய்ந்த கோபுரம்) மணிகூண்டு மற்றும் அதன் வளாகம் பெரிய அளவில் உருமாற்றம் அடைவதற்கான மேம்பாட்டு பணி தொடங்கப்படவுள்ளதாக தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத்தின் நிருவாகத்  தலைவர் டத்தோ கைருல் கூறினார். அந்நிலையில். இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி திருவிழாவுக்கான தற்காலிக வணிகக் கூடாரங்கள் பழைய இடத்திலிருந்து இங்குள்ள (OCBC) ஜாலான் மக்கோத்தாவுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் சுட்டினார். 


இடமாற்றப் பிரச்சினை  குறித்த தற்காலிக வியாபாரிகள் மற்றும் கடைகளைக் குத்தகைக்கு எடுத்து வியாபாரிகளிடம் லாபத்தை ஈட்டும் குத்தகையாளர்கள் அச்சத்தில் கிடக்கின்றனர். அந்நிலையில், இது தொடர்பில் “அலை ஒளி” செய்தியாளரிடம் அணுகி இத்தகவல் உண்மையா? என்று கேட்டுள்ளனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் பார்வைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அந்நிலையில், உடனடியாக தெலுக் இந்தான்  ஊராட்சி மன்ற நிருவாகம் மந்திரி பெசார் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.


அங்கு நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில், நடந்த விபரங்களை குறித்த டத்தோ சிவநேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,  ஊராட்சி மன்ற தலைவர் டத்தோ கைருடின், அவருடைய அலுவலகச் செயலாளர் மற்றும் வணிகக் கடைகளின் பொறுப்பாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி தற்காலிகக் கூடாரங்கள் இடமாற்றம் அவசியம் குறித்த மீண்டும் மீளாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மணிகூண்டு மேம்பாட்டு திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்படுகிறது. அதனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில், திருவிழா (01.05.2026) நடைபெறுகிறது என்பதால் இந்த இடமாற்றம் ஒத்திவைக்கும்படி டத்தோ சிவநேசன் விடுத்த ஆலோசனையை ஊராட்சி மன்ற நிருவாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 


ஆனால், அடுத்த ஆண்டு முதல் சித்திரா பௌர்ணமி தற்காலிகக் கூடாரங்கள் (58) கடைகள் (116) ஊராட்சி மன்றம் எடுத்துள்ள முடிவுக்கு வியாபாரிகளும்-குத்தகையாளர்களும் கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும். இந்தத் தற்காலிக வணிகக் கூடாரங்கள் சார்ந்த குத்தகையாளர்கள் வியாபாரிகளிடம் வசூலிக்கும் கட்டணம் என்பது அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கோட்டை தாண்டும்போது இரு தரப்புக்கும் மத்தியில் பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது. 


தவிர, குத்தகைக் கிடைக்காதவர்கள் கிடைத்தவருக்கு எதிராக ஒரு தமிழ்ப்பத்திரிகை செய்தியாளர் மூலம் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். மேலும், குத்தகையாளரிடம் கட்டணம் குறித்த நியாயம் பேசும் வியாபாரிகளுக்கு கடை வழங்க மறுக்கப்படுகிறது. தற்காலிகக் கூடாரங்கள் என்பது சுமார் 20 ஆண்டுகளாக நடைபெறுகிறது. தொடக்கத்தில் ஊராட்சி மன்றமே ஏற்று நடத்தியது. அப்போதும் பிரச்சினை. தனியார் குத்தகை முறையிலும் பிரச்சினை. நமக்குள் ஏன் இந்த  விரிசல்கள்? நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை எண்ணிப்பார்ப்போம். 


மேலும், இந்தத்  தற்காலிகக் கூடாரங்களினால் நேர்த்திக்கடன் செலுத்தும் பால்குடம் மற்றும் காவடிகள் ஏந்திவரும் பக்தர்களுக்கும், இரவில் இரத ஊர்வலத்திற்கும்  சாலையில் மிகப்பெரிய சவாலாகவும், சங்கடத்தையும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதை நேரில் காணுகின்றோம். இது நமக்கு தேவைதானா என்று ஒரு வினாடி யோசிப்போம்.  அதனால், அடுத்த ஆண்டு முதல்  இடம் மாற்றம் என்பது அவசியம். 

Post ImagePost Image

Leave a Comment