Alaioli
ஜூரு தமிழ்ப்பள்ளியில் "இளைய தொழில் முனைவோர் நாள் விழா – எதிர்காலத் தொழில் முனைவோரை உருவாக்கும் எழுச்சி நிகழ்வு!

ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகம், கல்விக் கோலத்தையும் கற்பனைத் திறனையும் இணைக்கும் அரிய நிகழ்விற்கு தளமாக மாறியது. மாணவர்களின் வியாபார நுண்ணறிவு மற்றும் தொழில் முனைவோர் சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் \"இளைய தொழில் முனைவோர் நாள்\" (Young Entrepreneurs’ Day) விழா மிக விமரிசையாக நடைபெற்றது.


இந்த ஆண்டுக்கான நிகழ்வின் பிரதான கருப்பொருளாக \"இளைய தொழில் முனைவோர் திட்டம்\" (Young Entrepreneurship Initiative) தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களில் புதிய யோசனைகள், சுயதொழில் கனவுகள் மற்றும் வர்த்தகத் திறமைகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு செயல்பாடுகள் அமைக்கப்பட்டன.


பள்ளித் தலைமையின் முன்னேற்பாடும் பாராட்டும்.


நிகழ்ச்சியின் முழு முகாமைத்துவ பொறுப்பை வகித்த பள்ளித் தலைமை ஆசிரியர் திரு இரா. நெடுமாறன், “மாணவர்கள் வகுப்பறையைத் தாண்டி உலகளாவிய பார்வையுடன் வளர வேண்டும். தொழில் முனைவோர் சிந்தனையோடு எதிர்கால வளர்ச்சியை அவர்கள் கற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இவ்விழா, அந்த சிந்தனைகளை ஊக்குவிக்க சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது,” என உரையாற்றினார்.


துணைத்தலைவரின் தூண்டுதல்:


பள்ளி மேலாளர் வாரியக்குழுவின் துணைத்தலைவராகவும், நிகழ்ச்சியின் தலைவராகவும் விளங்கும் திரு ஏ. பாலன், “இன்றைய மாணவர்கள் நாளைய தொழில் முனைவோர். அவர்களில் உள்ள புதுமை, முயற்சி, மற்றும் வியாபார நுண்ணறிவை வளர்க்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகள் கட்டாயம் தேவை என வலியுறுத்தினார்.


சிறப்பு வருகையும் பாராட்டும்:


இந்நிகழ்வில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திரு த. முனியாண்டி, திரு ஆனந்தகிருஷ்ணன், மற்றும் பினாங்கு மாநில தமிழ்பள்ளி முன்னாள் அமைப்பாளர் திரு இரா. காளிதாஸ் ஆகியோர் மாணவர்களை நேரில் வாழ்த்தினர்.


நிகழ்ச்சியை 5ஆம் ஆண்டு மாணவி ந. அஷித்தா, திறம்பட தொகுத்து வழங்கினார்.

மாணவர்களின் கற்பனையும், கைகொணர்வும்:

மாணவர்கள் உருவாக்கிய சிறிய அளவிலான வணிகக் காட்சிகள், தயாரிப்பு விளக்கங்கள், மற்றும் தங்களுடைய சொந்த தயாரிப்புகள் (பரிசுப் பொருட்கள், உணவுப்பொருட்கள், கைவினைப் பொருட்கள்) அனைத்தும் பார்வையாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றன. சில மாணவர்கள் நேரடி விற்பனையிலும் சிறந்த வர்த்தக அனுபவத்தைப் பெற்றனர்.


இவ்விழா ஒரு சாதாரண பள்ளி நிகழ்ச்சி அல்ல; இது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான புள்ளியாக அமைந்தது. இளம் தலைமுறையினரின் தொழில் நோக்கங்களைத் தூண்டும் இவ்வகை முயற்சிகள் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் நடைபெற வேண்டும் என்பது, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கூற்று.

மாணவர்கள் சிந்திக்கும் தொழில் முனைவோர் சிந்தனையை வளர்க்கும் இந்த விழா, ஒரு தலைமுறையின் வளர்ச்சியை நோக்கிச் செலுத்தும் முக்கியக் களமாக திகழ்கிறது.

Leave a Comment
Trending News