ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ’ ஒன் ஹஃபீஸ் காஸி அவர்களின் தலைமையில், ஜொகூர் பல துறைகளில் தேசிய அளவில் பெருமைக்குரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்து வருவதாக டத்தோ’ ஜஃப்னி குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் மட்டும் ரி.ம 91 பில்லியன் முதலீடு, மலிவு வீடமைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 20,183 வீடுகள் முடிக்கப்பட்டது, ரி.ம 182 பில்லியனைத் தாண்டிய டேட்டா நிலையம் வளர்ச்சி, நகர்ப்புற மற்றும் விவசாயத் துறைகளில் ஏற்பட்ட விரைவான முன்னேற்றம் ஆகியவை ஜொகூரின் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் சிக்கல்கள் நேரும் தருணத்தில் முதலில் அவர்கள் அணுகுபவர்கள் மன்ற உறுப்பினர்களே என்பதால், தொழில்முறைத் திறனும் பொறுப்புணர்வும் மிக அவசியம் என்று டத்தோ’ ஜஃப்னி கூறினார். இதனை முன்னிட்டு, மாநில அரசு ‘துருன் பாடாங்’ நேரடி சேவைத் தர அளவுகோல் அறிமுகம், ஜொகூர் ஒருங்கிணைந்த புகார் மையம் மேம்பாடு மற்றும் மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு சீரமைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் விளக்கினார்.
ஜொகூர் தற்போது ஸ்மார்ட் மாநிலம், ஜொகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ), மின்னிலக்க பொருளாதாரம், நகர்ப்புற நிலைத்தன்மை, மக்கள் வீடமைப்பு போன்ற மேம்பட்ட வளர்ச்சி கட்டத்துக்குள் நுழைந்துள்ள நிலையில், வேகமான செயல், தெளிவான முடிவு மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆட்சிமுறையுடன் உள்ளூராட்சி மன்றங்கள் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்றங்களின் திறன் மற்றும் நேர்மை முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் சமூக நலனுக்கும் முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
16 உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்று, மக்கள் நலனுக்கான வெளிப்படையான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் உயர்ந்த தாக்கத்துடன் கூடிய சேவை வழங்கல் முன்னேறும் எனவும், ஜொகூர் உள்ளூராட்சி நிர்வாகத்தில் முன்னுதாரண மாநிலமாகத் தொடரும் எனவும் டத்தோ’ ஜஃப்னி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.