புதுரா ஜாயா, ஏப்.8 -
லோ சியூ ஹொங் என்பவரின் மூன்று பிள்ளைகள் சுலோச்சனா, சுலோச்சனி மற்றும் தெட்சணாமூர்த்தி ஆகியோரின் மதம், அவர்களது தந்தை மு. நாகேசுவரனால் ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டது. இச்செயல் சட்டபூர்வமற்றது என இன்று புத்ராஜெயா கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பிள்ளைகள் சிறுவயதிலிருந்தபோது, தந்தையால் மதம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து தாயார் லோ சியூ ஹொங், ஆட்கொணர்வு மனு மூலம் பிள்ளைகளை தன்னோடு இணைத்துக் கொண்டார். இந்த வழக்கில் பெர்லிஸ் மாநில முஃப்தி எதிர்வினை தெரிவித்து வழக்கு தொடர்ந்தார்.
இதற்குமுன் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், பருவமடையாத பிள்ளைகள் தாயின் அறிவுமற்ற சம்மதமின்றி மதம் மாற்றம் செய்யப்படக்கூடாது என தீர்ப்பளித்து, பிள்ளைகள் தாயாருடனே வாழ அனுமதியளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பெர்லிஸ் முஃப்தி மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
மறுசீராய்வு மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், இன்று (ஏப்ரல் 8) அதனை நிராகரித்து, பிள்ளைகள் மீதான மதமாற்றம் செல்லாது எனவும், முன்னதாக வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பே தொடருவதாகவும் அறிவித்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் டத்தோஸ்ரீ ஹஸ்நா பிந்தி டத்தோ முகம்மட் ஹாஷிம், டத்தோ நோர்டின் பின் ஹசன் மற்றும் டத்துக் வாசீர் ஆலம் பின் மைதின் மீரா ஆகியோர் கொண்ட குழு விசாரித்தனர். மூவரும் ஒருமித்த முடிவுக்கு வந்து, தாயார் லோ சியூ ஹொங்-க்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
தாயாரின் பக்கம் இருந்து வழக்கறிஞர்கள் சம்ஷீர் மற்றும் குணமலர் தொடர்ந்து வாதாடினர். எதிர் பக்கம் பெர்லீஸ் முஃப்திக்கு வாதாடியவர் ஹனிப் கத்ரி ஆவார்.