Alaioli
ஏழு தினங்களாக மின்தடையால் காயு ஆரா அடுக்ககக் குடியிருப்பாளர்கள் அவதி, இப்போது குடிநீரும் இல்லை; என்ன கொடுமை என சமூக ஆர்வலர் பரம்சிவா கேள்வி

எஸ்.எஸ்.மணிமாறன். 

டாமன்சாரா( கோலாலம்பூர்).  ஏழு தினங்களுக்கு முன்பு இங்கு பிரதான மின்விசை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டதால் காயு ஆரா அடுக்ககக் குடியிருப்பாளர்கள் பல தினங்களாக குளிக்கவும் சமைக்கவும் குடிநீர், மின் வசதி இன்றி அவதிப் பட்டு வருகின்றனர் என்று சமூக ஆர்வலர் பரம்சிவா அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


இந்தக் குடியிருப்பில் 265 குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 25.2.2026 இல் அடுக்ககத்தில் ஓரிடத்தில் மின் விசையில் வெடிப்பு ஏற்பட்ட பின்பு தெனாகா நேசனல் அதிகாரிகள் அதை வந்து அடைத்து விட்டுச் சென்றதோடு, ஏழு தினங்கள் கடந்தும் அதை சீர்படுத்தாமல் இருப்பதால் இங்குள்ள குடியிருப்பாளர்கள் தொடர்ந்து பல் வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக பரம் சிவா அலை ஒளியிடம் கூறினார். 


இந்த அடுக்ககத்தில் மூன்று இன மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் டிஎன்பி நிறுவனத்தின் மெத்தனப் போக்கினால்  குடியிருப்பாளர்கள் வீதியில் எரியும் விளக்கு கம்ப வெளிச்சத்தில் வெளி வட்டாரத்தில் கிடைக்கும் நீரை கொண்டு சமைக்க வேண்டிய இக்கட்டில் உள்ளனர் என்று பரம்சிவா தமது ஆதங்கத்தை வெளியிட்டார். நாட்டின் தலைநகருக்கு அருகில் உள்ள காயு ஆரா அடுக்ககக் குடியிருப்பாளர்களுக்கு எத்துணைத் துயரமான அனுபவம், என்ன கொடுமையடா இது? என்று தாமும் புலம்ப வேண்டிய நிலையில் இதைக் கவனிக்க வேண்டிய அதிகாரிகள் கவனிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்று அவர் கூறினார்.  அடுக்ககக் குடியிருப்பாளர்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். எனினும் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ள வில்லை.  


இதை மடானி அரசின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனத்தில் கொண்டு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலை ஒளி ஊடகம் தமது வேண்டுகோளை முன் வைக்கிறது.

Leave a Comment
Trending News