பினாங்கு விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர், மாலத்தீவு, புருணை ஆகிய நாடுகளில் இருந்து கால்பந்து விளையாட்டு குழுக்கள் கலந்து கொண்டன. மலேசியாவில் வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், சபா, சரவா மாநிலங்கள் உட்பட பல கால்பந்து விளையாட்டு குழுக்கள் கலந்து கொண்டன.
20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இக்கால்பந்து விளையாட்டுப் போட்டியில் துவக்கத்தில், 12 குழுக்கள் பங்கு கொண்டன. பினாங்கு விளையாட்டு சங்கம் ஆசிய நாடுகள் அளவில் ஏற்பாடு செய்த விளையாட்டுப் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 70 குழுக்கள் பங்கு கொண்டன. மேலும் இப்போட்டியை காண ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு வருவார்கள் என கால்பந்து ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பால சுப்பிரமணியம் அலைஒளி செய்தியாளரிடம் கூறினார்.
18 வயதிலிருந்து 35 வரை, 28 வயதிலிருந்து 45 வயது வரை, 24 வயதிலிருந்து 55 வயது வரை என மூன்று வயது பிரிவுகளில் போட்டிகள் இன்று காலையிலிருந்து நடைபெற்றன. பினாங்கு மாநிலத்தில் விளையாட்டையும் சுற்றுலா துறையையும் மேம்படுத்த இந்தப் போட்டி விளையாட்டு உதவியது.
மூத்த வயதினர்களும், முன்னாள் கால்பந்து விளையாடிய மூத்த வயதினர்களும் கலந்து கொண்ட இப் போட்டியின் வழியாக அவர்கள் செயலுக்கமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்வதையும் விளையாட்டளர்கள் இடையே நட்பை வளர்த்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த போட்டி ஆசிய நாடு அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது என பாலசுப்பிரமணியம் மேலும் கூறினார்.
இன்று இரவு நடைபெற்ற விளையாட்டாளர்களுக்கான சிறப்பு விருந்து நிகழ்வில், கால்பந்து விளையாட்டு போட்டிக்கு ஆதரவளித்த பினாங்கு விளையாட்டு சங்க மூத்த அதிகாரி, பினாங்கு சுற்றுலாத்துறை, மாண்புமிகு ஷெர்லினா அப்துல் ரஷீத், ஆர் ஜி பி இன்டர்நேஷனல், கால்ஸ்பெர்க் மலேசியா, சிங்கப்பூர் வெஸ்ட்டின் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
முன்னாள் தேசிய கால்பந்து விளையாட்டாளர் டத்தோஸ்ரீ சோ சின் ஆஃன் இரவு நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார் என நிகழ்ச்சி ஏற்பாட்டு செயல் குழு உறுப்பினரான டாக்டர் கலை கூறினார்.