Alaioli
சிகரம் தொடுவோம் பிறையில் பொங்கியெழுந்த கல்விப் புரட்சி - 2000 மாணவர்கள் பங்கேற்ற 'கல்வி யுத்தம்' மகத்தான வெற்றி!

அகல்யா

​பிறை, ஏப். 15 - ​தமிழ் மாணவர்கள் வரலாற்றில் மாற்றத்தை விதைக்கப் புறப்பட்ட ‘கல்வி யுத்தம்’, பினாங்கு,பிறை  மண்ணில் ஒரு மாபெரும் அறிவுத் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.


ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் (SMC) முன்னெடுத்த இந்த எழுச்சி விழா, வெறும் கல்வி வழிகாட்டி முகாம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் போர்க்களம் என்பதை நிரூபித்துள்ளது.


அலைமோதிய ஆர்வம்


​பிறை, சுங் ஹவா 3 சீனப் பள்ளி மண்டபம் மாணவர்களின் கனவுகளாலும், பெற்றோர்களின் நம்பிக்கையாலும் நிரம்பி வழிந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடல் அலையெனத் திரண்டு வந்தது, பினாங்கு மாநில தமிழர்  சமுதாயம் கல்வியின் முக்கியத்துவத்தை எவ்வளவு ஆழமாக உணர்ந்துள்ளது என்பதற்குச் சான்றாக அமைந்தது.


நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, மாணவர்களின் இரத்த நாளங்களில் வீரத்தையும் விவேகத்தையும் தூண்டும் வகையில் உரையாற்றினார்.


​"இந்த நாட்டைச் செதுக்கியவர்கள் நாம். அடர்ந்த காடுகளைத் திருத்தி, வானுயர்ந்த கோபுரங்களை எழுப்ப அடித்தளம் இட்டவர்கள் தமிழர்கள் என்ற வரலாறு உங்கள் நினைவில் இருக்கட்டும். இன்று உங்கள் கையில் இருக்கும் ஆயுதம் கல்வி. தடைகளை ஏணிகளாக மாற்றி, நாட்டின் உயரிய பதவிகளை நீங்கள் அலங்கரிக்க வேண்டும். அந்த உத்வேகம் உங்கள் ஒவ்வொருவரிடமும் கனலாக எரிய வேண்டும்.


​கல்வி, ஒரு சமூக மாற்றத்திற்கான பேராயுதம்


​நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்புதிய பரிமாணத்துடன் \'கல்வி யுத்தம்\' மீண்டும் களமிறங்கியுள்ளது என்று பினாங்கு வீடமைப்பு மற்றும் சுற்று சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சூளுரைத்தார்.


"கல்வி யுத்தம்" நிகழ்ச்சியின்  ஆலோசகரும், பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் பேசுகையில்,


​கல்வியே புரட்சி, ஒரு மனிதனின் தலைவிதியை மாற்றி அமைக்கும் ஒரே வல்லமை கல்விக்கு மட்டுமே உண்டு.


​பெற்றோரின் கடமை,  குழந்தைகளின் கல்விக்கு முதலிடம் கொடுப்பதே ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சி. ​சேவை மனப்பான்மை , ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வெறும் பயிற்சி மையம் அல்ல, அது ஒரு கல்வி இயக்கம். ​பெண் சக்தியின் வியக்கத்தக்க ஒருங்கிணைப்பு ​இந்த பிரம்மாண்ட வெற்றியின் அடையாளம் என்றார்.



இந்த பிரமாண்ட நிகழ்ச்சியின் பின்னணியில் டாக்டர் ஜெ. சுமதி தலைமையிலான பெண் சக்தி குழுவினரின் மூன்று மாத காலக் கடும் உழைப்பு ஒளிந்துள்ளது. பினாங்கு மாநிலத்தின் பட்டிதொட்டியெங்கும் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, விழிப்புணர்வு விதைகளைத் தூவிய இக்குழுவின் ஒருங்கிணைப்புத் திறன், விழாவை இவ்வளவு பெரிய வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.


​தலைவர்கள் வாழ்த்து சாதனையாளர்களுக்குக் கௌரவம்

​ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் திரு. சுரேன் கந்தா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், முன்னாள் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், டத்தோ மரியதாஸ் கோபால், டத்தோ காளிஸ்வரன், டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் மற்றும் மூத்த இயக்குநர் டத்தோ எல். கிருஷ்ணன் உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் திசை காட்டினர்.



​நிகழ்வின் உச்சகட்டமாக, கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அந்த மேடை, வருங்கால மருத்துவர்களையும், பொறியாளர்களையும், ஆட்சியாளர்களையும் அடையாளம் காட்டும் ஒரு தளமாகத் திகழ்ந்தது.


​"கல்வி யுத்தம்" என்பது வெறும் முழக்கம் அல்ல, அது  இந்திய குறிப்பாக தமிழ் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வந்துள்ள ஒரு விடியல். இந்த எழுச்சி, வரும் காலங்களில் உலக அரங்கில் நம் மாணவர்கள் சாதனைகளை நிகழ்த்த உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கல்விப் பாதையில் பினாங்கு இளையோர் சங்கமித்தனர்.-Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment