Alaioli
கோயில் என்றால் உயர்ந்து நிற்கும் கோபுரம் இருந்தால் அது கோயில் ; டத்தோ சிவநேசன் உரைத்தார்..!

டிகே.மூர்த்தி

ஈப்போ, ஏப்ரல் 17- கோயில் கோபுரம் என்பது தெய்வத்தின் திருவடியாக இந்து சமயத்தில் கருதப்படுகிறது. தூரத்தில் இருந்து கோபுரத்தைப் பார்ப்பதே கோபுர தரிசனம் என்பார்கள். தனித் தனி நபர்களால் அமைக்கப்படும் கோபுரம் இல்லாத சிறிய வழிபாட்டு இடத்தைக் கோயில் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 


அந்த வகையில் ஊத்தான் மெலிந்தாங், ஜெண்டராட்டா கிராம வீடமைப்பு பகுதியில் “மலேசிய மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மீக அறப்பணி அமைப்புக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் சொந்த நிலத்தில் புதிய ஆலயம் அமைக்க இம்மாதம்  (08.04.2026) ல் பேரா அரசாங்கம் சட்ட ரீதியாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் “அலை ஒளி” சமூக ஊடகத்திடம் சொன்னார். 


இதனிடையே, நாட்டில் இனி புதிய கோயில் கட்டக்கூடாது என்று அரசாங்கம் கூறியுள்ளதாகவும் ,அப்படியானால், இனி வானத்தில் தான் கோயில் கட்டவேண்டுமா? என்றும்  ஒரு கட்சித் துணைத் தலைவர் முன்பின் யோசிக்காமல் பத்திரிகை செய்தியின் வழி கேள்வி கேட்டிருந்தார்.


வரும் (10.05. 2026) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அந்தப் புதிய கோயில் கட்டுமானப் பணி ஆரம்பிக்க முறையாக அந்த நிலத்தில் கலச விளக்கு வேள்வி பூசை ஆகம முறைப்படி நடத்தப்படுகிறது. 


அந்த நிகழ்வுக்கு பேரா அரசு சார்பில் நானும் பங்கேற்கிறேன். பொதுமக்களும் திரளாக வந்து கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டவர், பொறுப்புள்ள கட்சித் துணைத் தலைவர் என்னும் ரீதியில், யாராக இருந்தாலும் பேசும்போது அறிவோடும், ஆளுமையோடும் பேசவேண்டும் என்று டத்தோ சிவநேசன் குற்றம் சாட்டியுள்ளார். 


நம்மில் சிலர் தனித் தனியாக சொந்த விருப்பத்தின் காரணமாக அமைத்துள்ள கோபுரம் இல்லாத அக்கூடாரங்களை அல்லது கட்டிடங்களைக் குறித்த ஒரு  கண்ணோட்டத்தில், அவையாவும் முனீஸ்வரர் என்றும், முனியாண்டி என்றும், மதுரை வீரன் என்றும் கட்டிக்கொண்டு அதுதான்  கோயில் என்று தாங்களாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையிலும், பேரா அரசாங்கம் அவசரப்பட்டு விபரீத முடிவுகள் எடுக்கவில்லை. 


கோலகங்சார் அரண்மனை வளாகத்தில் முனீஸ்வரர் கட்டிடம் அமைத்துள்ளனர். தற்போது அதனை முறையோடு மாற்று  இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


இது போன்று கோபுரம் இல்லாத ஏராளமான கட்டிடங்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட்டது  என்றார். அதேவேளையில், நாட்டில் இதுவரை ஒரு முருகன் ஆலயமோ, விநாயகர் ஆலயமோ அரசின் சார்பில் பிரச்சினையை சந்தித்ததுக் கிடையாது.  


அதன்படி, ஜெண்டராட்டா கிராமத்தில் கட்டப்படும் புதிய கோயிலுக்கு தேவையான நிதி உதவி அளிக்கவும் மாநில அரசு மறுக்கப்போவதில்லை. அந்த ஆலய நிர்வாகத்திடம் ஆலயக் கட்டுமானப் பணிக்கான நிதி வளம் இருந்தாலும், மாநில அரசாங்கத்தின் இஸ்லாம் அல்லாதார் என்னும் திட்டத்தின் மூலம் மானியம் வழங்குவதற்கு தடை இல்லை என்றார் சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன்.


ஈப்போ மாநில முதல்வரின் அலுவலகத்தில் நடந்த  இச்சந்திப்புக் கூட்டத்தில், செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் ப. தியாகராஜன், வழக்கறிஞர் ஜெயா குட்டன், பல் மருத்துவர் காந்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News