Alaioli
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.

எஸ்.எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர்,  ஏப்ரல் 21- இங்கு, ஜெராம் வட்டாரத்தில் பத்து பாத்தா கிராமப்பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளாக கிராமவாசிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  கூட்டமாக பறந்து வரும் ஈக்கள் படையெடுப்பால்  பலரும் அன்றாட நிம்மதியைத் தொலைத்து, பொறுமையாக உணவைக் கூட உண்ண முடியாமல் வீட்டைச் சுற்றி வட்டமடிக்கும் ஈக்கள் பிரச்சினையில் இருந்து எப்போது எங்களுக்கு விடிவுகாலம் என்று குடியிருப்பாளர்கள் ஆவேசத்துடன் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் அருள் செல்வி நாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


அண்மையில், கோல சிலாங்கூர் மாவட்ட சுகாதார இலாகா சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இவ்வட்டாரத்தில் ஈக்களை விரட்ட மருந்து தெளிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


எனினும், தொடர்கதை போன்று ஈக்கள் படையெடுப்பு இக் கிராமத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று அவர் அலை ஒளியிடம் கூறினார். 


சிலாங்கூர் மாநில அரசில் செயல்படும் மாநில சுகாதார இலாகா உயர் நிலை அதிகாரிகள் இங்கு களத்தில் இறங்கி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை அருள் செல்வி முன் வைத்தார். 


இவ்வட்டாரத்தில் ஈக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதற்கு தொலை தூரத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்பதையும் கிராம மக்கள் சிலர் தமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள தகவலை அருள் செல்வி வெளியிட்டார்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News