Alaioli
இந்து வழிப்பாட்டு த் தலங்களைக் குறி வைத்து    அத்துமீறல் அடாவடிகள் தொடரும் ஸம்ரி வினோத் மீது அரசின்  நடவடிக்கை தேவை; ஹரிதாஸ் வேண்டுகோள்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங். மார்ச் 10.   இந்து வழிப் பாட்டுத் தலங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்திட துணிந்து அத்துமீறி வன்மமான அடாவடி வன்முறைச் செயல்களை மேற்கொண்டு வரும் ஒரு தீவிரவாதி போன்று தன்னைக் காட்டிக்  கொள்ளும் ஸம்ரி வினோத் காளிமுத்து மீது அரசின் கடுமையான அதே வேளையில் விரைவான நடவடிக்கை தேவை என்று கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளரும் தொகுதி கெ அடிலான் துணைத் தலைவருமான ஹரிதாஸ் ராமசாமி தமது வேண்டுகோளை முன் வைத்தார்.


மத நல்லிணக்கம் சகோதரத்துவம் சமத்துவம் ஒருமைப்பாடு என்ற மடானி அரசின் கோட்பாடுகளை மீறி வன்முறைக் குணக்கேடராக நடந்து கொள்ளும் ஸம்ரி,  வழிபாட்டுத் தலங்கள் மீது அத்துமீறி நடவடிக்கைகள் எடுப்பதற்கு யார் அவருக்கு அதிகாரமும் அனுமதியும் வழங்கியது? தனி மனிதராக இருந்து செயல்படும் ஸம்ரிக்கு பின்புலமாக இருந்து சூத்திரதாரியாக  வழி காட்டியாக வழிநடத்தி வரும் அந்த அரசியல் தேசத் துரோகி யார்? ஒற்றுமை அரசாங்கத்தில் புல்லுருவிக் காளானாக முளைத்து, சகோதரத்துவத்துடன் இந்த நாட்டில் வாழ்ந்து வரும் பிற இனத்தவரைப் பழி வாங்கத் துடிக்கும் வெறி பிடித்த ஜம்ரிக்கு தூண்டுகோளாக இருந்து செயல்படும் கபடதாரி யார்? என்பதை எல்லாம் அரசும் காவல்துறையும் தீவிரமாகக் கண்காணித்து கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரிதாஸ் அறிவுறுத்தினார்.


இன்றைய காலகட்டத்தில் பலராலும் புறக்கணிக்கப் பட்டு வரும் ஸ்ம்ரியின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு பெரிய முற்றுப் புள்ளி வைப்பதில் அரசு உடனடியாக களத்தில் இறங்கி  நாட்டின் தேசிய அமைதி ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று ஹரிதாஸ் அலை ஒளி வாயிலாக கேட்டுக் கொண்டார். இந்து வழிப்பாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதோடு, தெருவில் போவோரும் வருவோரும் அதற்கு இன்னல் ஏதும் ஏற்படுத்தாமல் தக்க நடவடிக்கை எடுத்து நாடு அமைதியான சூழலில் என்றும் பயணிக்க வேண்டும் என்று ஹரிதாஸ் தமது மனம் திறந்த கருத்தை வெளியிட்டார்.

Leave a Comment
Trending News