Alaioli
புனிதம் நிறைந்த திரிசூலத்தை காலால் மிதித்து சேதப்படுத்திய தமிம் டாஹ்ரியின் செயலைக் கண்டித்து ஹரிதாஸ் போலீஸில் புகார்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங். மார்ச் 10.      இந்து வழிப் பாட்டுத் தலத்தின் முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த புனிதம் நிறைந்த திரிசூலத்தை தமிம் டாஹ்ரி என்பவர் காலால் மிதித்து அதைச் சேதப்படுத்திய சம்பவம் வளைதலங்களில் பரவலாகப் பகிரப் பட்டு பக்தர்கள் மத்தியில் அதிக சினத்தையும் வெறுப்பையும் உண்டு பண்ணியதைத் தொடர்ந்து அது விஸ்வரூபம் எடுத்து பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், இதற்கு காரணமான நபரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று மாலையில் தாமும் தமது ஆதரவாளர்கள் சிலரும் கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததாக கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


இந்து வழிப்பாட்டுத் தலங்களில் முதன்மையாகவும் அதே வேளையில் கண்ணுக்குப் புலப்படாத அம்மன் இங்கு வீற்றிருக்கிறார் என்ற பக்தி உணர்வோடு,  திருவடிவில் புனிதமாகக் கருதப்படும் திரிசூலம் வைக்கப் பட்டு பக்தர்கள் பலரும் இறை நம்பிக்கையுடன் அதைக் கைகூப்பி வணங்கி  வழிபட்டு வருவதால், அந்தத் திரிசூலத்தையே மிதித்து சேதப்படுத்திய தமிம் டாஹ்ரிக்கு நமது சமயநெறி வேதங்களைத் தெளிவாக உணர்த்தும் வகையில், அந்த மனிதரை காவல் துறையினர் அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்பதால் இன்று காவல் நிலையத்தில் தாம் புகார் செய்ததாக அவர் கூறினார். 


கடந்த 2 வாரங்களுக்கு மேல் இத்தகைய சமய எதிர்ப்பாளர்களின் அடாவடி செயல்கள் நாட்டில் அளவுக்கு மீறி போனதோடு அதன் உச்சக் கட்ட நடவடிக்கையாக தமிம் டாஹ்ரி இந்து வழிப்பாட்டு த்தலத்தில் திரிசூலத்தைக் காலால் மிதித்து சேதப்படுத்தியது இந்து பக்தர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் தாம் வழங்கிய புகாரைத் தொடர்ந்து அந்த நபரை பிடித்து வந்து போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும், அந்த விசாரணையின் முடிவையும் நமக்கு அறிவிக்க வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக ஹரிதாஸ் அலை ஒளியிடம் கூறினார். 


நாட்டின் ருக்கூன் நெகாரா கோட்பாடான இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் எனும் தாரக மந்திரத்தை இந்து பக்தர்களும் மதித்து வழிப் பாட்டுத் தலங்களில் வழிபாடுகளை காலம் காலமாக தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர்.


அதே வேளையில், நாடும் மக்களும் மன்னரும் சுபீட்சத்துடன் நலமுடன் நீடூ வாழ வேண்டும் என்ற சிவபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள வேத மந்திரங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்து பக்தர்கள் அனைவரும் செயல்படுத்தி வருகின்றனர் என்ற தாத்பரிங்களை அரசும் அரசைச் சார்ந்த அனைத்து இன மாந்தரும் உணர்ந்து தெளிய வேண்டும், பிற வழிப்பாட்டுத் தலங்களில் மூக்கை நுழைத்து தேவையின்றி மனம் புண்பட வேண்டாம் என்று தாம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக ஹரிதாஸ் தமது கருத்தை இங்கு வெளியிட்டார்.


புகார் தெரிவிக்கச் சென்ற ஹரிதாஸூக்கு ஆதரவாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் பன்னீர் செல்வம் குப்பன், சமூக ஆர்வலர்கள் கருணாகரன், கமலநாதன், தனபாலன் வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment
Trending News