Alaioli
பினாங்கு எல்ஆர்டி திட்டத்தில் இந்திய வணிகர்களுக்கு பங்கேற்கும் வாய்ப்பு


பினாங்கு மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இலகு இரயில் சேவை (LRT) திட்டத்தில், இந்திய வணிகர்கள் பங்கேற்கும் வகையில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என எஸ்ஆர்சி (SRC) நிறுவனம் உறுதியளித்துள்ளது.


நேற்று காலை செபராங் ஜெயா தெ லெட் தங்கும் விடுதியில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், பினாங்கு இந்திய வணிகர் தொழிலியல் சங்க பிரதிநிதிகள் மற்றும் எஸ்ஆர்சி நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் திரு. அடில் புத்ரா அக்மட் ஆகியோர் கலந்துரையாடினர்.


இந்த சந்திப்பின் போது, பினாங்கு மாநிலத்தில் பல பில்லியன் மதிப்பில் நடைபெறவிருக்கும் எல்ஆர்டி திட்டத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளூர் இந்திய வணிகர்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.


பினாங்கு இந்திய வணிகர் தொழிலியல் சங்கம் சார்பில்,அதன் தலைவர் டத்தோ என் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்ஆர்டி திட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் நிலையில், இந்திய வணிக சமூகமும் அதில் பங்கெடுக்க உரிமையுடையவர்கள் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. 


இதற்குப் பதிலளித்த எஸ்ஆர்சி நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் திரு. அடில்,
“பினாங்கு மாநில வளர்ச்சியில் அனைத்து சமூகங்களின் பங்கேற்பும் முக்கியமானது. குறிப்பாக இந்திய வணிகர்கள், கட்டுமானம், விநியோகம், சேவை மற்றும் பல துறைகளில் பங்களிக்க திறமையுடையவர்கள் என்பதால், அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.


மேலும், இந்த ஒத்துழைப்பு பினாங்கு மாநிலத்தில் உள்ளூர் தொழில்முனைவோர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சமூக-பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த சந்திப்பில், எல்ஆர்டி திட்டத்தில் இந்திய வணிகர்கள் எவ்வாறு பங்குபெறலாம் என்பது குறித்து விரைவில் சிறப்பு குழு அமைத்து மேலதிக ஆலோசனைகள் நடத்த முடிவு செய்யப்பட்டதாக சங்கம் அறிவித்துள்ளது.


இந்த முன்முயற்சி, பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் முக்கிய அடிக்கட்டு வளர்ச்சிகளில் இந்திய வணிகர்களுக்கும் உரிய இடத்தை உறுதி செய்வதோடு, சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment
Trending News