Alaioli
சுங்கை பக்காப் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம் – திரளானோர் சாமி தரிசனம்

சுங்கை பக்காப் மார்ச் 9 செபராங் பிறை தென் மாவட்டம் சுங்கை பக்காப்பில் புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்ட அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகம்  காலை 8.30 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயக  பெருமானை  தரிசனம் செய்தனர்.சுமார் 5 லட்சம் ரிங்கிட் செலவில் ஆலயப் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக ஆலயத் தலைவர் டத்தோ மா. பெருமாள் தெரிவித்தார்.


காலை நேரத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஆலய நிர்வாகஸ்தர்கள் புனித நீர் நிரப்பப்பட்ட கும்பங்களை சுமந்து வந்து கலசங்களில் அபிஷேகம் செய்தனர். இந்த மகா கும்பாபிஷேக வைபவத்தை சிவ ஶ்ரீ பத்மநாதன் குருக்கள் தலைமையில், சிவ ஶ்ரீ சரவணன் குருக்கள் மற்றும் பிற குருமார்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தினர்.கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதுடன், மதியம் உச்சிக்கால பூஜைக்குப் பிறகு பிரசாதமும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பேசிய ஆலயத் தலைவர் டத்தோ மா. பெருமாள், ஆலய நிலம் வாங்குவதற்கு உதவிய பினாங்கு முன்னாள் முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஆலய கட்டடம் எழுவதற்கு உதவிய பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ கா. புலவேந்திரன், முன்னாள் சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் பிரத்திபால் சிங் அப்துல்லா மற்றும் ஆலயத்திற்காக நன்கொடை வழங்கிய பெரியவர் நாராயணசாமி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பேராசிரியர் பி. இராமசாமி, “ஆலயம் என்பது நமது அடையாளம். எக்காரணத்திற்கும் இதனை விட்டுக்கொடுக்கக் கூடாது. இந்துக்களின் அடையாளமாக உள்ள ஆலயங்களை அகற்ற முயற்சிக்கும் தரப்புகளை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும்,” என வலியுறுத்தினார். கோயில்களை அகற்றும் பிரச்சினைகள் தவறான முறையில் நடைபெறுவதாகவும், இதை அரசு கவனமாக அணுக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ கா. புலவேந்திரன் பேசுகையில், ஆலயங்களை அகற்ற வேண்டும் என முயற்சிக்கும் தரப்புகளை பொருட்படுத்தாமல் காவல் துறை அதனை கவனிக்க வேண்டும் என தெரிவித்தார். உலக பொருளாதாரம் சவால்களை எதிர்கொள்ளும் இந்த காலத்தில் மக்கள் ஒற்றுமையுடன் இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்துரைத்த பெரியவர் நாராயணசாமி, இந்துக்கள் பிறரை குறை கூறாமல் தங்களது சமயத்தை காப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும், தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் சமய ஒற்றுமையை பேண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வு பக்தி உணர்வும் ஆன்மிக ஒற்றுமையும் நிறைந்ததாக அமைந்தது.கும்பாபிஷேக விழாவில் கல்வி அமைச்சரும்,நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் பட்லீனா சிடேக் உடன் கலந்து சிறப்பித்தார் .



Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News