Alaioli
தேசிய முன்னணி மடானி அரசாங்கத்துக்கான ஆதரவை மீட்டுக் கொள்ள வேண்டும்!

ஜோகூர்,மார்ச்10: நாட்டில் இனங்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட காரணமாக இருக்கும் பக்கத்தான் ஹரப்பான் (மடானி) அரசாங்கத்துக்கு தேசிய முன்னணி தனது ஆதரவை உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலரான சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்த நாட்டின் அடித்தளம் மத மற்றும் இன ஒற்றுமை. அந்த ஒற்றுமைக்கு சில தனிநபர்களின் செயல்களால் பங்கம் ஏற்படும் போது அதை தடுத்து நிறுத்த தவறி, அந்த கூட்டணிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டே இருந்தால், வரும் 16-வது பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று ம.இ.கா.வும் மனப்பால் குடிக்க வேண்டாம் என்றும் அவர் மேலும் நினைவூட்டினார்.

ஏற்கனவே தேசிய முன்னணி 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தபோது இத்தகைய சூழ்நிலை இல்லை என்று கூறுவது மட்டும் போதாது; அதை நிரூபிக்கவும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.


தேசிய முன்னணியை அன்றைய காலத்தில் மக்கள் ஏன் புறக்கணித்தார்கள் என்பது நாடு அறிந்த விவகாரம். அதை மனதில் பதிய வைத்து செயல்பட வேண்டும்.

இல்லையெனில் எந்த சூழ்நிலையிலும் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது திண்ணம். 


ஆகவே, காலம் கடத்தாமல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, மடானி கூட்டணியில் இணைந்து இருப்பது சில பிரச்சினைகளை உருவாக்குகிறது என்று காரணம் கூறி தேசிய முன்னணி தார்மீக பொறுப்பு ஏற்று விலகிக் கொண்டால் ஒருவேளை மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறலாம். 


இல்லையெனில் இனி எந்த காலத்திலும் ஆட்சியில் அமர முடியாது என அரசியல் ஆய்வாளருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment
Trending News