Alaioli
அரா குடா, பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய இரத ஊர்வலத்தின் பயண விபரங்கள்

அரா குடா, பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் 140-ஆவது ஆண்டு விழாவையொட்டி, வரும் 17/04/2026 அன்று மாலை 5.00 மணியளவில் முதல் நாள் இரத ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அன்னை முத்து மாரியம்மன் எழுந்தருளி, வாட் சியாம் தெலுக் வாங் புத்தர் ஆலயம், தாமான் அரா முத்தியாரா, ஜாலான் ஜாராக், தாமான் தேசா அரா பெர்மாய் மற்றும் ஜாலான் லூனாஸ் வழியாக வீதி உலா வருவார்.

 

அதனைத் தொடர்ந்து, வெல்லஸ்லி தோட்ட ஆலயத்தைச் சென்றடையும் இரதம், வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மீண்டும் பெனாந்தி தோட்ட ஆலயத்தை வந்தடையும்.

 

தொடர்ந்து இரண்டாம் நாள் இரத ஊர்வலம் 18/04/2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்படும். இந்த ஊர்வலம் ஜாலான் மெங்குவாங், தாமான் ஸ்ரீ மெங்குவாங் மற்றும் பெனாந்தி நகரப் பகுதிகள் வழியாகச் செல்லும். குறிப்பாக, பெனாந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும் அன்னையைத் தரிசிக்கவும், அர்ச்சனைகள் செய்து வழிபடவும் திரளான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விழாவின் மிக முக்கிய நிகழ்வான மஹா தீமிதி திருவிழா 19/04/2026 அன்று நடைபெறவுள்ளது. அன்று மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் பல்லாக்கில் எழுந்தருளி, வாட் சியாம் தெலுக் வாங் ஆற்றங்கரைக்குச் சென்று சக்திக் கரகம் பாலித்து ஆலயத்திற்குத் திரும்புவார்.

 

அதனைத் தொடர்ந்து, இரவு 7.30 மணியளவில் மகா தீமிதி மகோற்சவம் (பூக்குழி இறங்குதல்) நடைபெறும். இரவு 8.30 மணிக்குச் சிறப்புப் பூஜைகள் முடிந்தவுடன், அம்பாள் ஆலய உட்பிரகாரத்தை வலம் வந்து முறைப்படி இருப்பிடம் அமர்வார்.


இத்திருவிழாவில் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிகுழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சுந்தரராஜ சோமு அவர்கள் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

 

இந்த 140-ஆவது ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு, அன்னை மாரியம்மனின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

 

 

 

 

Leave a Comment