Alaioli
‘தர்மா மடானி’ திட்டம் மடை மாற்றியது அநீதி ; செனட்டர் சரஸ்வதி கந்தசாமி குற்றச்சாட்டு..!

டிகே.மூர்த்தி,

ஊத்தான் மெலிந்தாங், ஏப்ரல் 30-அண்மையில் மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவு (மித்ரா) சார்பில், தர்மா மடானி திட்டத்தின் கீழ் 300 கோயில்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று வழக்கறிஞர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தனது முகநூல் மூலம் இச்செய்தியை இந்திய சமூகத்திற்கு சேர்ப்பிக்கும் நோக்கத்துடன் தமிழில் பகிரிந்துள்ளார். அச்செய்தியை ‘அலை ஒளி’ ஊடகம் சுருக்கமாக வெளியிட்டுள்ளது. 


அழைப்பிற்கும், கோயில்களுக்கு எந்த மனமார்ந்த உதவிக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், என் மனச்சாட்சியின் அடிப்படையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் நான் விலகியுள்ளேன். அதற்கான கடிதத்தை, காரண விளக்கங்களோடு மித்ராவுக்கு அனுப்பியுள்ளேன். தேசிய ஒற்றுமை அமைச்சு (KPN) மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி குறித்து தொடர்ந்து பலர் என்னை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர். அதற்கான விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். அதுவே இப்பதிவின் நோக்கம். 


கோயில்களுக்கு ஒரு முறை மட்டும் பணம் வழங்கும் திட்டமாக ஒருபோதும் உருவாக்கப்படவில்லை, மாறாக “இந்துக் கோயில்களை சமூக மையங்களாக வலுபடுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் சமூக மாற்றத்திற்கான ஒரு திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 


ஆலயங்களை கல்வி, திறன் பயிற்சி, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான தளங்களாக பயன்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்துள்ளது. அந்நிலையில் முதற்கட்டமாக, ஒற்றுமை அமைச்சின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் மாநாட்டை நடத்த தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் ஆகோ டாகாங் ஒப்புதல் அளித்தார். 


அந்நேரத்தில் தேசிய ஒற்றுமை துணை அமைச்சராக இருந்த என்னுடைய மேற்பார்வையின் கீழ் முழு முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது. மித்ரா பிரதிநிதிகள் உட்பட 600  கோயில்கள் மற்றும் 20 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் சமூகத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கோயில்கள் எதிர்நோக்கும் நிலப்பிரச்னை தீர்ப்பதற்காக அரசு தரப்பு பிரதிநிதி உள்ளடக்கிய ஒரு சட்டக் குழு அமைப்பதற்கான தீர்மானமும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அமைச்சரவை அங்கீகாரம், நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, ஒற்றுமை அமைச்சு மட்டத்தில், 2025 செப்டம்பர் மாத நடுப்பகுதிக்குள் ஒரு தனிப்பட்ட செயலாக்கக் குழு அமைக்கப்பட்டு, மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், மலேசிய இந்து வழக்கறிஞர்கள் சங்கம், தாரா அறவாரியம் போன்ற முக்கிய இந்து மற்றும் இந்திய அமைப்புகள் அக்குழுவில் இணைக்கப்பட்டன. 


மித்ரா நிதி விநியோகத்தை ஒருங்கிணைக்க மட்டுமே பொறுப்பளிக்கப்பட்ட குழுவின் (JPIMI) அப்போதைய தலைவர், இத்திட்டத்தின்  நோக்கத்தையும், இலக்கையும் புறந்தள்ளி, தன்னிச்சையாக 1000 கோயில்களுக்கு ஒருமுறை நிதி வழங்கும் திட்டமாக அதை மாற்றினார். 


அவரது அந்த தன்னிச்சையான செயல் எங்களது தனிப்பட்ட முயற்சியை தாண்டி சமுதாயத்திற்கே ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும். இந்த தன்னிச்சையான முடிவிற்கு எதிராக நான் எனது மிக வலுவான எதிர்ப்பை பதிவு செய்தேன். சமூக அமைப்புகளும் எதிர்ப்பை பதிவு செய்தன. எனினும், அவரது தன்னிச்சையான முடிவுகள் தொடர்ந்தன. 


அதன் விளைவாக, உருமாற்றுத் திட்ட வடிமைப்பும் இந்த புதிய மாற்றத்தில் இனியும் பொருந்தாது என்பதால், ஒற்றுமை அமைச்சு இத்திட்டத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயில்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு நான் எதிரானவர் அல்ல. நிதி சவால்களை எதிர்நோக்கும் கோயில்களுக்கு அரசு நிதி உதவி தரவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. 


ஆனால், அத்தகைய உதவிகள் வழிபாட்டு தலங்களுக்கென தனியே அல்லது புதிதாக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பெற்று வழங்க வேண்டும். மித்ரா அமைப்பு கல்வி, தொழில் முனைவு, திறன் மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றம் மூலம் சமூகத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்டது. அந்த நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். 


குறுகியகால காட்சிப் படுத்தலுக்காக மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. “இந்துக் கோயில்களை சமூக மையங்களாக வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் சமூக மாற்றத்திற்கான வடிவமைக்கப்பட்ட ‘தர்மா மடானி’ திட்டத்தை அதன் ஆரம்பகால நோக்கிலிருந்து மடை மாற்றியது தவறு என்பதோடு இது சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும் என்பதை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Comment
Trending News