Alaioli
பினாங்கிலுள்ள உணவகங்களில் பொது மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை!

பினாங்கு ஏப்ரல் 3 -மாநிலத்தின் ஷூட்டிங் படாங் உணவு வளாகத்தில் உள்ள ஒரு கடையில் அண்மையில் ஏற்பட்ட பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பான புகாரைத் தொடர்ந்து, மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் நேரிடையாக  களமிறங்கி நிலைமையை  ஆய்வு செய்தார்.


அவரது இந்த வருகையின்போது  மாநகர் மன்ற உறுப்பினர் டான் சூ சியாங், ரோஹைசாத் ஹமீத் மற்றும் ஊய் மெய் மெய்  ஆகியோரும் உடன் இருந்தனர். மாநிலத்திலுள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்களுடன் அவற்றின் வியாபாரிகளின் நலனும் என்றென்றும் பேணப்படுவதை  உறுதி செய்வதில் உள்ளூர்  அதிகாரிகளின் தலையீடும் பங்களிப்பும் உறுதி செய்யப்படுமென்று வலியுறுத்தப்பட்டது.


இப்பகுதியில் உள்ள ஒரு கடை, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்  சங்கடத்திற்கு இடமளிப்பதாகவும்,  சமூகத்தின் பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலாக இருப்பதாகவும்  எழுந்திருக்கும் புகார்களுக்குத்  தீர்வு காண்பதே மேயரின் இந்த  வருகையின் முக்கிய நோக்கமென்று  தெரிவிக்கப்பட்டது.


இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட  உணவு வளாகத்தின் வசதிகளைப்  பயன்படுத்தும் மற்ற வியாபாரிகள்  மற்றும் பார்வையாளர்கள்  மத்தியிலும் கவலையை  ஏற்படுத்தியிருப்பதால், மேயரும் மன்ற உறுப்பினர்களும் வியாபாரிகளின் குறைகளையும்  கருத்துக்களையும் நேரடியாகக்  கேட்டறிவதற்காக அவர்களுடன்  ஒரு சந்திப்பை நடத்தினர். 


இதன் மூலம் எடுக்கப்படும்  ஒவ்வொரு முடிவும் களத்தில்  உள்ள உண்மை நிலையை  அடிப்படையாகக் கொண்டிருப்பதைஉறுதி செய்வதற்கும், அனைத்துத்  தரப்பினரின் நலன்களையும்  கருத்தில் கொள்வதற்கும் உகந்த  அணுகுமுறையாக அமைந்திருப்பது அவசியமாகிறது.


இந்த கலந்துரையாடல் அமர்வின் விளைவாக, சம்பந்தப்பட்ட கடைகளை இடமாற்றம் செய்யும் முன்மொழியப்பட்ட திட்டம் உட்பட, சிறந்த தீர்வு நடவடிக்கைகளை மன்றம் மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த நடவடிக்கை, பதட்டங்களை தணிப்பதற்கும், வணிகச் சூழல் பாதுகாப்பாகவும் உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு செயலூக்க அணுகுமுறையாகக்  கருதப்படுகிறது.


இந்த கள வருகையின் போது, மாநகர் மன்றத்தின் உரிம இயக்குநர் டேனி கோய் ஹாக் சியாங் மற்றும் அமலாக்க இயக்குநர் திரு. நூர் அஸ்ரெய்ன் நூராஸ்லான் ஓங் ஆகியோரும் உடனிருந்தனர். அவ்வண்ணம்சமூகத்தின் பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்காக, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்  மாநகர் மன்றம் உறுதியாக செயல்படுமென்று  தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment
Trending News