Alaioli
பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் வளர்க்கப்படும் விதத்தில் ; ஒரு தாய் கூறுகிறார்..!

டிகே.மூர்த்தி,

சித்தியவான், ஏப்ரல் 4-ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு பார்வை மற்றும் தனிச் சிறப்பும் இருக்கிறது. அவர்களிடம் அமைந்துள்ள திறமையை பெற்றோர்கள் வெளிப்படுத்த வேண்டுமே தவிர, மற்ற பிள்ளையோடு வைத்து ஒப்பிடக் கூடாது. எல்லா பிள்ளைகளுக்கும் ஆதரவு கொடுத்து உற்சாகம் ஊட்டி முன்னேற வைக்க வேண்டும். அப்போது தான் நம் சமுதாயம் படித்த சமுதாயமாக, ஒழுக்கம் நிறைந்த சமுதாயமாக மிளிர முடியும் என்று எஸ்பிஎம் (2025) தேர்வில் 11A பெற்றுள்ள சக்திவேல் கணேசனின் தாயார் வாசுகி “அலை ஒளி” செய்தியாளரிடம் சுட்டினார். 


கல்வி என்றால் என்ன? என்பதனை பிள்ளைகளுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அதே வேளையில், அவர்களுக்கு நம் சமயம் மற்றும் ஒழுக்கம் குறித்த இந்த மூன்றையும் சமநிலையாக சொல்லிக் கொடுத்தால், பிள்ளைகள் வாழ்க்கையில் சிறந்த இடத்தைப் பெற்றிடுவர் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர் என்ற பொறுப்பில் நாங்கள் இன்று வரை எங்கள் பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வுடன் செயலாற்றி வருகிறோம். அந்நிலையில், எங்கள் மகன் சக்திவேல் எஸ்பிஎம் தேர்வில் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார் என்றால், இங்குள்ள முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் என்ற ரீதியில் அகமகிழ்கிறோம். இதற்கு ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் என்றார் வாசுகி. 


சக்திவேல் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். எதுவுமே நமக்கு எளிதாகக் கிடைக்காது என்பதால் சிரமத்தைப் பாராமல், ஆர்வத்துடன் படித்தார். அதனால் அவரால் இந்த வெற்றியை அடைந்துள்ளார். அவருடைய கனவு தான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்கிறார். இதற்கு முன்பு சக்திவேல் எத்தனையோ தோல்விகள் சந்தித்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. அதனைக் கண்டு துவண்டுவிடும் நிலைக்கு ஆளாகாமல், முடியும் என்ற மனதிடத்துடன் தடைகளை உடைத்து கல்வியில் தனது இலக்கை நோக்கியே பயணித்தார். பிள்ளைகள் தோல்வியை சந்திக்க நேரிடும்போது, பெற்றோர்கள் அவர்கள் மீது வெறுப்பினைக் காட்டாமல் அரவணைக்க வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினார்.

Leave a Comment
Trending News