Alaioli
வெ.3,43,846 மானியம் வழங்கினார் மாண்புமிகு சிவநேசன்!!

ஆலயங்கள்,தமிழ்ப்பள்ளி,பொது இயக்கம்,சுகாதார நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடுகளுக்காக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் வெ.3 லட்சத்து 43 ஆயிரத்து 846ஐ மானியமாக வழங்கினார்.


அவ்வகையில்,பீக்கம் தமிழ்ப்பள்ளி,பீக்கம் பாலர்ப்பள்ளி,பீடோர்,சிலிம் ரீவர் வட்டார ஆலயங்கள்,பீடோர் இந்து சங்கம்,கே.ஆர்.டி கம்பார்,கே.ஆர்.டி சென்டெரியாங்,தெலுக் இந்தான் வட்டார ஆலயங்கள் மற்றும் பொது இயக்கங்களுக்கு இந்நிதி அவரவர் நடவடிக்கைகளின் தேவைக்கு உட்பட்டு மானியமாக வழங்கப்பட்டதாக சிவநேசன் தெரிவித்தார்.


மானியம் பெற்றவர்கள் எந்த நோக்கத்திற்காக மானியம் கொடுக்கப்பட்டதோடு,அதனை ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும்.மேலும்,அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கான செயல் அறிக்கையை தனது கவனத்திற்கு கொண்டு வரவும் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


பெறப்பட்ட மானியம் முறையாக அதன் நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்ந்த பின்னரே சம்மதப்பட்ட இயக்கத்திற்கு,சமய அமைப்புகளுக்கு மீண்டும் மானியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.மானியம் பெற்ற பல இயக்கங்கள் அதனை முறையாக கையாள்வதில்லை.மானியம் பெற வழங்கப்படும் நடவடிக்கை அறிக்கைக்கும் அவர்கள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளும் நிறைவாக இருப்பதில்லை என்றார்.


முறையான செயலறிக்கை,நிகழ்ச்சியை முறையாக நடத்தியதற்கான கணக்கறிக்கை,புகைப்படங்கள்,சான்றுகள் சமர்ப்பிக்கப்படும் இயக்கங்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மீண்டும் மானியம் வழங்குவது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.


இதற்கிடையில்,ஒவ்வொரு ஆலயமும் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்பது அனைத்து ஆலய நிர்வாகத்திற்கும் தெரியும்.ஆனால்,அவர்கள் கும்பாபிசேகத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறுதொகையை சேமிக்க தவறிவிடுகின்றனர்.கும்பாபிசேகம் செலவு குறைந்தது 6 லட்சம் தொடங்கி 1 மில்லியன் வரை நீளுகிறது.ஏன் கும்பாபிசேகத்திற்கு நிதி சேமிக்கலனும் கேட்டால்,நாங்க இப்பத்தான் பதவிக்கு வந்தோம்,புதிய நிர்வாகம் என காரணம் சொல்கிறார்கள்.


இனி இப்படியெல்லாம் இருக்ககூடாது.கும்பாபிசேகத்திற்கு மானியம் கோரும் ஆலயங்கள் போதுமான நிதியை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.ஒவ்வொரு ஆண்டும் சிறுதொகையை அவர்கள் சேமிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.


இதற்கிடையில்,அண்மையில் ஒரு பள்ளியில் சிற்றுண்டிச்சாலையில் மின்சார கட்டணம் செலுத்தவில்லையென ஒரு தலைமையாசிரியர் தன்னை அணுகியதாக கூறிய சிவநேசன் ஒவ்வொரு மாதமும் பள்ளிச் சிற்றுண்டிச்சாலையின் மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதா என்பதை கூட அறிந்து கொள்வதில் மெத்தனமாய் இருப்பது வருத்தமாக இருப்பதாக கூறினார்.


நம் சமுதாயத்தின் அடையாளமாக திகழும் ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் அவர்களின் செயல்பாடுகளிலும் முன்னெடுப்புகளிலும் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்ட அவர் இன்றைக்கு மானியம் பெற்ற அனைத்து தரப்பினரும் அம்மானியம் வாயிலாக சிறப்பானதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.

Leave a Comment