Alaioli
ஒரு விரல் மை ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ளது ; ரமதான் பெருநாள் சிறப்பு விருந்துபசரிப்பில் கேசவன் பேச்சு..!

டிகே.மூர்த்தி

சுங்கை சிப்புட், ஏப்ரல் 14-நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வில் இந்த ரமதான் பெருநாள் சிறப்பு விருந்துபசரிப்பில், இனம் மதம் மொழி என்ற வேறுபாடின்றி மலேசிய அன்னைப் பெற்றெடுத்த மலேசியர்களாகவும், மனத்தால் ஆனந்தம் பொங்கிடும் நிலையில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பங்கேற்றுள்ளோம்.



அது போன்று தீபாவளி மற்றும் சீனப் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளுக்கும் ஆண்டு தோறும் சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் பேசினார். 


நேற்று முன்தினம் (12.04.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இங்குள்ள கம்போங் லோஹ், காராய்  பொது மண்டபத்தில், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் சார்பில் இந்த நிகழ்வு நேர்த்தியுடன் நடந்தேறியது.


சுமார் 800 பேர் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கமாக “நெகாராகூ”  தேசப்பற்று பாடலை அடுத்து நாடும் மக்களும் நலத்துடன் வாழ (துவா) பிரார்த்தனை செய்யப்பட்டது. 


தொடர்ந்து கேசவன் பேசுகையில்,  கடந்த இரண்டு தவணைகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற மக்களுக்கு அரும்பணி ஆற்றிடவும், உங்களின் ஒரு விரல் மை கொண்டு ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ளதற்கு இந்த வேளையில் பாக்கத்தான் ஹராப்பான் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியைக் கூறுகின்றேன். தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவதே எனக்கு நீங்கள் இட்டக் கட்டளையாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். 



மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் பள்ளிகளை சீரமைப்பது, மண்டபம் கட்டுவது, எஸ்பிஎம் மாணவர்களுக்கு தேவையான பள்ளி சார்பில் கல்வி இலாகாவுக்கு உறுதுணையாக இருப்பது  சாலைகள்,பாலங்கள் சீரமைப்பது போன்ற மக்கள் நலனே முக்கியம் என சீருயர்த்தும் பணியில் முழுவீச்சாக கடமையாற்றுகிறேன்.  


அதன் பயனாக இவ்வாண்டு எஸ்பிஎம் (2025) தேர்ச்சி விகிதத்தில், பேரா மாநில நிலையில் கோலகங்சார் (சுங்கை சிப்புட்)  மாவட்டம் இரண்டாம் இடத்திற்கான வெற்றியை பெற்றுள்ளது. இந்த நற்செய்தி  கல்வி இலாகாவுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் மக்கள் சேவை மையத்திற்கும் தித்தித்திக்கும் செய்தியாகவும் கிடைக்கப் பெற்றுள்ளோம்.


அடுத்த ஆண்டில், மாநிலத்தில்  முதல் நிலை வெற்றியைப் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். அதற்கான உதவி வழங்கிட பெற்றோர்கள் சார்பில் தயாராக இருக்கிறேன் எனக் கூறி உரையை நிறைவு செய்தார் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கேசவன் சுப்பிரமணியம்.- Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News