Alaioli
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A

கோகி கருணாநிதி


ஸ்கூடாய், ஏப்.14 –2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் கடந்த 22 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.


தொடக்கத்தில் மூன்றாம் ஆண்டு முதல் படிவம் 5 வரை 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம், இன்று 2 கிளைகளில் மொத்தம் சுமார் 1,500 மாணவர்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.


எஸ்.பி.எம் 2025 தேர்வில் இந்த ட்யூஷன் மையத்தில் பயின்ற 280 மாணவர்களில் 53 பேர் அனைத்து பாடங்களிலும் நேரடி A பெற்றுச் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.


மேலும் 280 மாணவர்களில் 140 பேர் 5 A-க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த முடிவுகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த மாணவர்களில் 99% பேர் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விடயமாகும் என்று ட்யூஷன் மைய உரிமையாளர் சுஜயந்தி கிருஷ்ணன் (44) தெரிவித்தார்.


“22 ஆண்டுகளாகக் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் எங்களது பயணம் சிறிய முயற்சியால் தொடங்கி இன்று பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. மாணவர்களின் சாதனைகளே எங்களது மிகப்பெரிய மகிழ்ச்சி,” என அவர் கூறினார்.


மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் 27.6.2026 அன்று பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


தாமான் துன் அமினா இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ரினிஷா தனபாலன் (11A), முன்பு ரினி தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவியாக இருந்தவர், “சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் பாடங்களை மட்டும் கற்பிக்காமல் எங்களை ஊக்குவித்து முன்னேறச் செய்தது. மன உளைச்சலில் இருந்தபோதும் தொடர்ந்து உற்சாகப்படுத்தினர்,” என்று தெரிவித்தார்.


டத்தோ உஸ்மான் அவாங் இடைநிலைப் பள்ளி மாணவி ஆஷ்லேகா பெர்னாண்டஸ் ஜோன் (10A), முன்பு துன் அமினா தமிழ்ப் பள்ளியில் பயின்றவர், “ஒரே கேள்வியைப் பலமுறை கேட்டாலும் ஆசிரியர்கள் ஒருபோதும் கோபப்படாமல் பொறுமையுடன் விளக்கிக் கொடுத்தனர். புரியும் வரை கற்றுத்தருவதில் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தனர்,” என்றார்.


சுல்தானா துன் அமினா பள்ளியைச் சேர்ந்த ரஷ்னிதா சேகர் (8A), குறிப்பாகக் குமரன் ஆசிரியர், கண்ணன் ஆசிரியர் வழங்கிய வழிகாட்டுதலுக்காக நன்றியைத் தெரிவித்தார்.


கங்கார் பூலாய் இடைநிலைப் பள்ளி மாணவர் வெற்றிவேல் வாசு (11A), முன்பு கங்கார் பூலாய் தமிழ் பள்ளியில் கல்வி கற்றவர், “இந்த ட்யூஷன் மையத்தின் வழிகாட்டுதலால் தேர்வில் சிறப்பாகச் சாதிக்க முடிந்தது,” என்று கூறினார்.



இதேவேளை, ட்யூஷன் மைய உரிமையாளரின் மகளான சர்மித்ரா ஸ்ரீ குமரன் 9 பாடங்களில் நேரடி A+ பெற்றுச் சிறப்பித்துள்ளார். தாமான் சுத்தரா இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் குமரனின் மகளான அவர், தனது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அவர், “என் தாயார் எப்போதும் எனக்கு மனவுறுதி அளித்தார். என் தந்தை கல்விக்குத் தேவையான முழு ஆதரவையும் வழங்கினார். ஆசிரியர்கள் நேரத்தை ஒதுக்கி வழிகாட்டியதாலேயே இந்த வெற்றியை அடைய முடிந்தது,” என்று தெரிவித்தார்.


மாணவர்களின் தொடர்ச்சியான சாதனைகள் மூலம் கல்வித் துறையில் சிறந்த வழிகாட்டுதலை வழங்கும் மையமாக சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் திகழ்ந்து வருகிறது.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News