Alaioli
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை ஒவ்வொரு வினாடியும்  முக்கியம் ;  உரிய விசாரணை தொடரும் டத்தோ சிவநேசன்..!

டிகே.மூர்த்தி

தெலுக் இந்தான், ஏப்ரல் 18- நேற்று 17.04.2026 ல் தெலுக் இந்தான் பெக்கான் பாருவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், சுவரை தாண்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று முகமுடி சந்தேகர்களால், பலத்த வெட்டுக் காயத்திற்கு ஆளான 69 வயது முதியவர் உயிரிழந்தச் சம்பவம் குறித்த பேரா ஆட்சிக்குழுவின் சார்பில் மாநில சுகாதாரத்திற்கு தலைமை வகிக்கும்  டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தை இன்று (18.04.2026) பகல் ஒரு மணியளவில் நேரில் வந்து மாநில அரசு சார்பில் அனுதாபத்தைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். 


அப்போது காலம் சென்றவரின் மனைவி கண்ணீர் மல்க கூறுகையில், அத்துமீறி அரிவாளுடன் வீட்டுக்குள் நுழைந்த அந்த மூன்று சந்தேக நபர்கள், தமது கணவரை எதுவும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சினேன், அழுதேன். கேட்காமல் அவரை கூர்மையான அரிவாளால் தாக்கியதுடன், நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றனர். 


அந்நிலையில் பலத்தக் காயங்களுக்கு ஆளான என் கணவரின் உடலில் இருந்து அதிகமான இரத்தம் வெளியாகிக் கொண்டிருந்தது. உடனடியாக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு (அவசர  பிரிவு) ஆம்புலன்ஸ் வண்டி குறித்த சீக்கிரம் வரும்படி கேட்டுக் கொண்டோம். அரை மணி நேரத்திற்குப் பின்புதான்  ஆம்புலனஸ் வந்தது. 


உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வண்டி வந்து பாதிக்கப்பட்ட என் கணவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும் அந்த அம்மையார் கனத்த மனதுடன் விவரித்தார்.


அதன் பிறகு வெளியே காத்திருந்த ஊடகவியாளர்களை டத்தோ சிவநேசன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கூறியபடி, தெலுக் இந்தான் மருத்துவமனை ஆம்புலன்ஸ் குறித்த எத்தனை மணிக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றது. 


அங்கிருந்து 10 அல்லது 15 நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டிய நிலையில் எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸ் வண்டி பாதிக்கப்பட்டவரின் வீட்டை அடைந்தது போன்ற உண்மையான தகவல் மருத்துவமனை மற்றும் மாநில சுகாதார இலாகாவிடம் இருந்து பெறப்படும்.


அதற்கான விசாரணையும் என் பார்வையில் மேற்கொள்ளப்படும். ஆம்புலன்ஸ் வண்டி குறித்த மருத்துவமனை தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். 


தெலுக் இந்தான் மருத்துவமனையில் தேவைக்கு மேல் போதுமான ஆம்புலன்ஸ் வண்டிகள் உள்ளன. இல்லை என்று மறுக்க முடியாது. இருந்தும் ஏற்பட்ட கால தாமதத்திற்கு காரணம் கூறவேண்டும்.


அந்நிலையில், தெலுக் இந்தான் மருத்துவமனை மற்றும் மாநில சுகாதார இலாகாவிடம் (JABATAN KESIHATAN PERAK dan HOSPITAL TELUK INTAN)  முறையாகவும், நேர்மறையாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும். 


அதேவேளையில், இச்சம்பவம் குறித்த காவல் துறையும் தனது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.  விரைவில் தீர்வுக் காணப்பட நாளை காவல் துறையையும் தாம் சந்திக்க இருப்பதையும் டத்தோ சிவநேசன் உறுதி அளித்துள்ளார். 


மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊராட்சி வீடமைப்பு அமைச்சருமான ஙா கோர் மிங், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் தம்மிடம் கூறியுள்ளார் என்றார் டத்தோ சிவநேசன். -Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News