Alaioli
இந்தியர் குரல் புறக்கணிக்கப்பட்டால் ஜொகூரில் சுயேட்சை அலை உருவாகும்

கே.கே.ஆர்.தேவி

ஜொகூர், மே 23- ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து அடிமட்ட மக்களிடையே அதிக கவனம் உருவாகி வருவதாக சமூக ஆய்வாளர் ஆர். சுரேஸ் தெரிவித்தார்.


இந்த முறை தேர்தலில் இந்தியர்களின் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர்களின் எதிர்காலம், சமூக உரிமைகள் ஆகியவற்றை உண்மையாக முன்வைக்கும் வலுவான இந்திய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


குறிப்பாக இந்திய வாக்காளர்கள் கணிசமாக உள்ள பெர்மாஸ் ஜெயா போன்ற பகுதிகளில், மக்களுடன் நெருக்கமாக செயல்பட்ட நம்பகமான தலைவர்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்க்கும்போது, தெங்காரோ, கஹாங், கமேலா போன்ற தொகுதிகள் குறித்து பல்வேறு பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகின்றன. அதேவேளையில், மீதமுள்ள சில தொகுதிகள் ம.இ.காவுக்கு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


ஆனால், எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது முக்கியமான கேள்வியாக இருந்தாலும், அந்தத் தொகுதிகளில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்கள் என்பதே இந்திய மக்களின் உண்மையான கவலையாக உள்ளது என ஆர். சுரேஸ் குறிப்பிட்டார்.


“மக்களோடு இருந்தவர்கள், சமூகப் பணியில் ஈடுபட்டவர்கள், இளைஞர்களின் தேவையை புரிந்துகொள்ளும் தலைவர்கள் தான் இப்போது தேவை. பெயருக்கு மட்டும் வேட்பாளரை நிறுத்தும் அரசியல் அணுகுமுறை இனி ஏற்றுக்கொள்ளப்படாது,” என அவர் தெரிவித்தார்.


ம.இ.கா தொகுதி தலைவர்கள் பலரும் சட்டமன்ற வாய்ப்புக்காக முன்வருவதாகக் கூறப்படும் நிலையில், கட்சித் தலைமை அடிமட்ட தொண்டர்களின் மனநிலையையும் இந்திய சமூகத்தின் இன்றைய தேவைகளையும் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.


இந்திய சமூகத்திற்கு உரிய மரியாதை வழங்கப்படாமல், மக்கள் விரும்பும் தகுதியான இந்திய வேட்பாளர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், ஜோகூரில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.


“மக்கள் நம்பிக்கை தான் முக்கியம். கட்சி அடையாளம் மட்டும் போதாது. இந்தியர்களின் குரல் பலமாக ஒலிக்க வேண்டும். அதற்காக தேவையான சூழல் வந்தால், சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையும் உருவாகலாம்,” என அவர் கூறினார்.


அதேநேரம், இந்திய சமூகத்தின் உண்மையான எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்படாத சூழல் ஏற்பட்டால், தாமும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என ஆர். சுரேஸ் அறிவித்தார்.


“இது பதவிக்கான முயற்சி அல்ல. இந்தியர்களின் உரிமை, மரியாதை, அரசியல் குரல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான நிலைப்பாடு. மக்கள் விருப்பம் இருந்தால், சுயேட்சையாக களமிறங்க நான் தயாராக உள்ளேன்,” என அவர் தெரிவித்தார்.-Alaiolinews

Leave a Comment