Alaioli
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கூலிம், செப். 15 — கூலிம், தாமான் திராம் ஹாய் டெக் பகுதியில் உள்ள வீட்டில் மனைவியை கத்தியால் 13 முறை குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 43 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூலிம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்ட் ஷம்சுல் சின்ரிங் வெளியிட்ட அறிக்கையில், சந்தேக நபர் நேற்று இரவு 8.40 மணியளவில் லூனாஸ் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்ததாகத் தெரிவித்தார். பின்னர் இரவு 9 மணியளவில் குலிம் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சுமார் 20 சென்டிமீட்டர் நீளமுடைய மடக்குக் கத்தி சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டு, விசாரணைக்கான தடயப் பொருளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணம்
பொறாமை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக கணவன்–மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தனது மனைவியை 13 முறை கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதில் மார்புப் பகுதியில் ஏழு முறையும், வயிற்றுப் பகுதியில் ஐந்து முறையும், வலது விலாப் பகுதியில் ஒரு முறையும் குத்தியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.இந்தத் தாக்குதல் தம்பதியினர் தங்களது மூன்று வயது குழந்தையுடன் வசித்து வந்த பிரதான படுக்கையறையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தைச் சோதனையிட்டபோது, படுக்கை விரிப்பு, தலையணை, படுக்கையின் தலைப்பகுதி மற்றும் படுக்கையில் இருந்த சில பொருட்களில் இரத்தக் கறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. கெடா மாநிலக் காவல்துறைத் தலைமையக தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணைக்குத் தொடர்புடைய 11 மாதிரிகளைச் சேகரித்தனர்.
குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்தார்
சம்பவத்திற்குப் பின்னர் சந்தேக நபர் குளித்துவிட்டு, குழந்தையைப் பராமரிப்பாளரிடமிருந்து அழைத்துச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்தது. பின்னர் ஜூரு ஓய்வு மற்றும் ஓய்விடப் பகுதியில் (R&R) தனது சகோதரியிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார்.
அப்போது தனது மனைவியைக் கத்தியால் குத்தியதாகவும் அவர் சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்பது தெரியவந்ததுடன், அவருக்கு முன்குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.
அக்கம்பக்கத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவத்தின்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால் தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான எந்தச் சத்தமும் தங்களுக்குக் கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் செட்டார் சுல்தான் பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!