Alaioli
பினாங்கு ரதி பட்டு மாளிகை சார்பில் 200 அன்னையர்களுக்கு சேலை அன்பளிப்பு,அன்னையரைக் கௌரவித்த மனிதநேய விழாவில் ஆச்சி குழு உறுப்பினர்  டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு பங்கேற்பு!

பினாங்கு மே 9-பினாங்கில் செயல்பட்டு வரும் ரதி பட்டு மாளிகை ஏற்பாட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு  அன்னையர்களைக் கௌரவிக்கும் விதமாக 200 பெண்மணிகளுக்குச் சேலைகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி பினாங்கு ரதி ஸ்திரீட்டில் அமைந்துள்ள ராஜி பட்டு மாளிகையில் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு சேலைகளை வழங்கினார். அவர் தனது உரையில், சமுதாயத்தில் அன்னையர்களின் பங்கு மிகவும் உயர்ந்தது என்றும், அவர்களை மதித்துக் கௌரவிக்கும் இத்தகைய சமூகநல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனவும் கூறினார்.


“வியாபாரம் செய்வது ஒரு வகை என்றாலும், அதே நேரத்தில் சமூக நலத் திட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மிகவும் பாராட்டுக்குரியது. அந்த வகையில் ரதி பட்டு மாளிகை தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்து வருகிறது,” என டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு மேலும் குறிப்பிட்டார்.


நிகழ்ச்சியில் ரதி பட்டு மாளிகையின் நிர்வாக இயக்குநர்களான டத்தோ கன்டேசன் மற்றும் டத்தோ ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னையர்களுக்குச் சேலைகளை வழங்கினர்.


இந்த சமூகப்பணித் திட்டத்தின் மூலம் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவியளிப்பதுடன், அன்னையர்களின் அர்ப்பணிப்பை மதிக்கும் நோக்கமும் முன்னிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மகிழ்ச்சியுடன் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.


மேலும், ரதி பட்டு மாளிகை தற்போது 19 கிளைகளுடன் செயல்பட்டு வருவதுடன், தீபாவளி உதவித்திட்டங்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கான பங்களிப்புகள், தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகநல நடவடிக்கைகள் மூலம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு உதவிகள் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


“நம்மைப் பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்து, தன்னலம் கருதாமல் வாழும் தாய்மார்களை அன்னையர் தின விழாவில் கௌரவிப்பதுடன், அவர்களுக்குச் சேலை அன்பளிப்பாக வழங்கியதில் ரதி பட்டு மாளிகை பெருமை கொள்கிறது,” என டத்தோ கன்டேசன் தனது உரையில் குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சி சமூக ஒற்றுமையையும் மனிதநேய பண்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.- Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment