Alaioli
பன்னாட்டு தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு மலேசியத் தமிழ் கல்வியின் பெருமிதம்!-டத்தோ சிவநேசன் பெருமிதம்!!

சிவாலெனின்

தஞ்சோங் மாலிம், மே11 - தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகத்தில் அதன் தமிழ்த்துறை ஏற்பாட்டில் நடைபெற்ற 6வது பன்னாட்டு தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு மலேசியத் தமிழ்க் கல்வி  பயணத்தில் புதியதோர் வெற்றி  பயணம் என பேரா மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் பெருமிதம் கொண்டார்.


மலேசியாவில் தமிழ் கல்வியும் தமிழ்ப்பள்ளிகளும் தமிழர்களின் தனித்துவ அடையாளமாக மட்டுமின்றி தமிழினத்தின் மரபையும் பண்பாட்டையும் பேணி காத்திடும் அரணாகவே திகழ்வதாகவும் கூறிய டத்தோ சிவநேசன் தமிழ் வழி தொடக்கும் தமிழ் கல்வி இடைநிலைப்பள்ளி பல்கலைக்கழகம் தொட்டு ஆசிரியர் பயிற்சி கழகங்களிலும் அது தனித்துவ செழிமையோடு மலேசிய மண்ணில் ஆழமாய் வேரூன்றி இருப்பதாகவும் கூறினார்.


கடந்த காலங்களில் தமிழ்த்துறை என்றாலே அது மலாயா பல்கலைக்கழகத்தில் மட்டுமே தனித்துவ அடையாளத்தைக் கொண்டிருந்ததது என்பதை சுட்டிக்காண்பித்த டத்தோ சிவநேசன் அதற்கு நிகராக பேரா மாநிலத்தில் சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகம் திகழ்வது பெருமிதமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


இவ்வளவு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகம் தொடர்து ஆக்கப்பூர்வமாக இயங்குவதற்கு கடந்த காலங்களில் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியிருந்தனர்.


ஆனால்,கடந்த 2024ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கு அச்சிகல் இல்லை.தாம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 2024ஆம் ஆண்டு மற்றும் 2025ஆம் ஆண்டு மட்டும் சுமார் வெ.53 ஆயிரத்து 500 ரிங்கிட் மானியமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாண்டு இதுவரை வெ.65 ஆயிரம்  ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


சிறப்பாக இயங்கும் இம்மாதிரியான பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி,பண்பாடு,பாரம்பரியம்  மட்டுமின்றி கல்வி சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் தாம் அரணாக இருந்து உதவிடத் தயாராகவே இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.



கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பன்னாட்டு தமிழ்க்கல்வி ஆராய்சி மாநாட்டை நிறைவு செய்து  வைத்து சிறப்புரை ஆற்றுகையில்  டத்தோ சிவநேசன் இவ்வாறு விவரித்தார்.


மேலும், இந்தப் பன்னாட்டு தமிழ் கல்வி ஆராய்ச்சி தமிழ் கல்வியை மட்டுமின்றி உலகத் தமிழர்களிடையே கல்வியோடு பண்பாடு மற்றும் அறிவுசார் பிணைப்புகளையும் வலுப்படுத்துகிறது.


தமிழ் என்பது எல்லைகளைக் கடந்து பேசப்படும் ஒரு இனத்தின் மொழி மட்டுமில்லை.அது இலக்கியம்,தத்துவம்,அறநெறி மற்றும் தொன்மையான இனத்தின் நாகரிகப் பாரம்பரியம் எனவும் டத்தோ சிவநேசன் நினைவுறுத்தினார்.


மலேசியாவில் தமிழ் கல்விக்கு ஒரு நீண்ட மற்றும் பெருமைமிக்க வரலாறு உண்டு. இந்த நாட்டில் தமிழ் கல்வியின் வேர்களை, காலனித்துவ காலத்தில் இந்திய சமூகம் மேற்கொண்ட ஆரம்பகால குடியேற்றத்தில் இருந்து கண்டறியலாம்.


ஆரம்பகால தமிழ் சமூகம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற எண்ணற்ற சவால்கள் இருந்தபோதிலும், நமது முன்னோர்கள் ஒரு முக்கியமான உண்மையை உணர்ந்திருந்தனர்:


கல்வியே கண்ணியம் மற்றும் முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்தி புலம்பெயர்ந்த நாடுகளிலும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர் என்றார்.


மேலும், குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய எளிய தோட்டப் பள்ளிகளில் இருந்து, தமிழ் கல்வி பல பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.


இன்று, மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகள் மீள்திறன், பண்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் கல்விசார் மாற்றத்தின் சின்னங்களாகத் திகழ்கின்றன. தலைமுறை தலைமுறையாக வந்த ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்புகள், தமிழ் மொழியும் கல்வியும் இந்த நாட்டில் தொடர்ந்து செழித்து வளர வழிவகுத்துள்ளன என்பதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.


அதே சமயம், இன்றைய தமிழ்க் கல்வி என்பது மொழியைப் பாதுகாப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தமிழ்ப் பள்ளிகளும் தமிழ்க் கல்வித் திட்டங்களும் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், தொழில்முனைவு, விளையாட்டு, கலைகள் மற்றும் உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்குகின்றன.


மலேசியாவைச் சேர்ந்த பல தமிழ் மாணவர்கள் பல்வேறு கல்விப் போட்டிகள், புத்தாக்கக் கண்காட்சிகள், விவாதப் போட்டிகள், ரோபோட்டிக்ஸ் போட்டிகள் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் உயர்கல்விப் பாதைகள் ஆகியவற்றில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.


சர்வதேச புத்தாக்கப் போட்டிகள், STEM தொடர்பான திட்டங்கள் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டங்களில் மலேசியத் தமிழ் மாணவர்கள் நாட்டைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். தமிழ்க் கல்விப் பின்னணியைக் கொண்ட மாணவர்களும் உலக அரங்கில் போட்டியிடுவதற்குச் சமமான தகுதியுடையவர்கள் என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.


அதனால்தான் இது போன்ற மாநாடுகள் மிகவும் முக்கியமானவை என்று தாம் நம்புவதாக கூறிய அவர் இன்றைய கல்வி மிக வேகமாக உருமாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை உலகெங்கிலும் உள்ள வகுப்பறைகளை மறுவடிவமைத்து வருகின்றன. தமிழ் கல்வியும் தனது மொழி மற்றும் பண்பாட்டு வேர்களை இழக்காமல், இந்த புதிய சகாப்தத்தில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்க வேண்டும் எனவும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.


அதேவேளையில், ஆசிரியரக்ள் என்பவர்கள்  வெறும் ஒரு மொழியைக் கற்பிப்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள்  விழுமியங்கள், தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலத் தலைமைத்துவத்தை வடிவமைக்கும் சமூக உருமாற்றத்தின் சிப்புகள். இன்றைய காலகட்டத்தில் ஒரு தமிழ் கல்வியாளரின் பங்கு, வகுப்பறைப் போதனையை விட மிகப் பெரியது. நீங்கள் வழிகாட்டிகள், புதுமைப் படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், ஆலோசகர்கள், ஊக்கமளிப்பவர்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் சமூக விஞ்ஞானிகள் எனவும் புகழாரம் சூட்டினார்.


மாநாட்டிற்கு வருகை புரிந்திருக்கும் மலேசியா உட்பட பன்னாட்டு தமிழாசிரியர்களே,அறிஞர்களே,ஆர்வாலர்களே தங்கள் தமிழ் அடையாளத்தில் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், உலகளாவிய திறன்கொண்ட குடிமக்களாகவும் திகழும் மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். நம்பிக்கையுடன் தமிழ் பேசக்கூடிய, பல மொழிகளில் தொடர்பு கொள்ளக்கூடிய, விமர்சன ரீதியாக சிந்திக்கக்கூடிய, படைப்பாற்றலுடன் புதுமைகளைப் புகுத்தக்கூடிய, மற்றும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவதே நாளைய சவால் மிக்க உலகில் தமிழும் தமிழர்களும் சிறந்தோங்க மூலதனமாய் அமையும் என்றும் கூறினார்.


மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாக இருநாட்கள் நடைபெற்ற இம்மாநாடுக்கு ஏற்பாட்டுக்குழு தலைவராக சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் கார்த்திகேசு தலைமையேற்ற நிலையில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை உட்பட பன்னாட்டு பேராளர்களும் கலந்து கொண்டதோடு தமிழ்க்கல்வி அதுசார்ந்த முன்னெடுப்பு,ஆக்கப்பூர்வப் பணிகள்,ஆசிரியர்களின் பங்களிப்பு,தமிழ்க்கல்வி உருமாற்றம் என பல்வேறு நிலைகளில் ஆய்வுக்கட்டுரைகளும் கலந்துரையாடல்களும் இம்மாநாட்டின் நிறைவாய் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.- Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment