Alaioli
அறிவியல் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பட்டறை

கே.கே.ஆர்.தேவி

ஜோகூர் பாரு, மே 15 – புக்கிட் செரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னெடுத்த முயற்சியிலும், ஜோகூர் பாரு தலைமையாசிரியர்கள் மன்றத்தின் இணைப்பிலும் நடைபெற்ற “அறிவியல் மேம்பாட்டுக் கற்றல் – கற்பித்தல் பட்டறை” ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


காலை 8 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், ஜோகூர் பாரு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 80 அறிவியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்று அறிவியல் கற்பித்தலுக்கான புதிய அனுபவங்களைப் பெற்றனர்.


அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கமான ASTI அமைப்பின் செயலவை உறுப்பினர் முனைவர் சுப்ரமணியம் குருசாமி பட்டறையை வழிநடத்தினார். அறிவியல் பாடங்களை மாணவர்களுக்குச் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கும் புதிய முறைகள், மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் செயல்பாடுகள், இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து அவர் விளக்கமளித்தார்.


ஜோகூர் மாநிலக் கல்வித் திணைக்களத்தின் பாலர்பள்ளி, ஆரம்பப்பள்ளிப் பிரிவின் உதவி இயக்குநர் தமிழொளி இரவிசந்திரன் இராமசந்திரன் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.


இதில் ஜோகூர் பாரு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றக் கழகத் துணைத்தலைவர் உயர்திரு நடராஜா சி. காளிமுத்து, யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரும் ஜோகூர் பாரு மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவருமான திரு குணாளன், கெலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு லிங்கேஸ்வரன், ஜோகூர் மாநில இளம் ஆய்வாளர் அறிவியல் விழா ஒருங்கிணைப்பாளர் திரு செல்வகுமார் நாராயணசாமி, மேனாள் விரிவுரையாளர் தமிழ்ச்சுடர் இராம சேதுபதி, கேளான் தமிழ்ப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் இனியர் சீனிவாசகம் சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் புக்கிட் செரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு சிவபிரகாசம் பாரிமுத்து வரவேற்றார். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆளுமை வளர்ச்சியையும் மேம்படுத்த இதுபோன்ற பயிற்சிப் பட்டறைகள் பெரிதும் உதவுகின்றன என அவர் தெரிவித்தார்.


பட்டறையில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அறிவியல் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு ஆசிரியர்களிடையே பயனுள்ள அனுபவமாக அமைந்தது.-Alaiolinews

Post Image

Leave a Comment