Alaioli
சமயச் சிந்தனைகள் வழியாக சமூக மாற்றத்திற்கு வலுசேர்த்த கருத்தரங்கு “மக்களைச் சந்திப்போம் – 5” நிகழ்வில் ஆன்மிக அறிஞர்கள் வலியுறுத்தல்

தஷ்மிக்கா தியாகு

மஞ்சோங், மே 28 – சமயத்தின் வழியாக சமூக நல்லிணக்கம், மனிதநேயம்,  தலைமுறை விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் மலேசிய சைவ சமயம் பேரவையின் ஏற்பாட்டிலும் சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆதரவிலும் நடைபெற்ற “மக்களைச் சந்திப்போம் – 5” சிறப்பு சமயக் கருத்தரங்கு, சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் அண்மையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.


மனித வாழ்க்கையை உயர்ந்த பண்புகளின் வழி வழிநடத்துவதில் இறைநம்பிக்கையின் அவசியம் குறித்து கருத்தரங்கில் பங்கேற்ற ஆன்மிக அறிஞர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

சமூகத்தில் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் மனிதநேயம் நிலைநிறுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் இத்தகைய கருத்தரங்குகள் பெரும் பயனை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


“வழிபாடு ஒரு நெறி” என்ற தலைப்பில் உரையாற்றிய சமயச் சொற்பொழிவாளர் சிவத்திரு பூபாலன் பூவன், வழிபாடு என்பது வெறும் சடங்காக மட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும், அது மனிதனை நல்ல சிந்தனை மற்றும் ஒழுக்கமிக்க வாழ்க்கை நோக்கி அழைத்துச் செல்லும் ஆன்மிக வழிகாட்டியாக அமைகிறது என்றும் கூறினார். மனித மனதில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதில் இறைசிந்தனை முக்கிய பங்காற்றுகிறது என்றும் அவர் விளக்கினார்.


ஆன்மிக அறிஞர் சிவத்திரு செல்வகுமாரன் நடராஜன் தனது உரையில், இறை வழிபாட்டின் உண்மையான வடிவம் பிறருக்குச் செய்யும் சேவையிலும் தன்னலமற்ற உதவியிலும் வெளிப்படுகிறது என்றார். மனிதநேயம் மற்றும் கருணை நிறைந்த செயல்பாடுகளே இறை அருளைப் பெறும் உண்மையான பாதை எனவும் அவர் வலியுறுத்தினார்.


முனைவர் நாகப்பன் ஆறுமுகம் உரையாற்றுகையில், வாழ்க்கையின் மனஅழுத்தங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள இறைசிந்தனை மனிதனுக்கு மனவலிமையையும் தைரியத்தையும் அளிக்கிறது என்றார். தினசரி வாழ்வின் அழுத்தங்களில் இருந்து மீண்டு உள்ளார்ந்த அமைதியை பெறுவதற்கு ஆன்மிக சிந்தனை முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


அதேவேளை, நாயன்மார்கள் போற்றிய “பிள்ளைச் செல்வம்” குறித்த கருத்தை விளக்கிய ஆன்மிக அறிஞர் சிவத்திரு மணிமாறன் கோவிந்தராஜ், நல்லொழுக்கம், பக்தி மற்றும் பணிவுடன் வளரும் தலைமுறையே சமூகத்தின் உண்மையான செல்வம் என தெரிவித்தார். தூய எண்ணங்களும் உயர்ந்த செயல்பாடுகளும் இணைந்த வாழ்க்கை மனிதனை முழுமை நோக்கி வழிநடத்தும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.


இதனையடுத்து, உலு சிலாங்கூர் மாவட்டத்தின் கெர்லிங் பகுதியில் உருவாகவுள்ள சைவத் திருக்கோயிலும் சைவக் கல்லூரியும் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சைவ சித்தாந்தம், ஆகமம், திருமுறை மற்றும் தமிழ் பண்பாட்டை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவில் பல கட்டங்களாக அமையவுள்ள இத்திட்டத்தில் சைவக் கல்லூரி, நூலகம், ஆய்வு மையம், விடுதிகள், தியானக் கூடங்கள் மற்றும் உலகத் தர மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன. திருமுறை, பண்ணிசை, தமிழ் இசை, நடனம் மற்றும் நவீன கல்வியையும் ஒருங்கிணைக்கும் ஆன்மிகக் கல்வி வளாகமாக கெர்லிங் உருவாகும் என சிவத்திரு பூபாலன் பூவன் குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவராக ஆசிரியர் கணேசன் சண்முகம் சிறப்பாக செயல்பட்டார். மாபெரும் இந்தச் சமயக் கருத்தரங்கில் மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், இந்து சமய அமைப்புகளின் பொறுப்பாளர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.-Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News