புக்கிட் மெர்த்தாஜாம்.ஜூன் 4-பினாங்கு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சி கூட்டத்தில் நான்கு மொழி பேசும் இனத்தவர்கள் முதன்முறையாக கலந்து கொண்டு தூய ஆவியின் அருளைப் பெற்றனர். தமிழ், ஆங்கிலம்,சீனம், தேசிய மொழிகளில் அருங்கொடை எழுச்சி கூட்டம் புக்கிட் மெர்த்தாஜாம் புனித அன்னாள் மைனர் பசிலிகா திருத்தலத்தில் நடைபெற்றது.
எல்லாம் வல்ல இறைவனைப் போற்றிப் புகழ் ஆராதனை நான்கு மொழிகளில் நடைபெற்றது. ஜெப ஆராதனையின் துவக்கத்தில் எக்காளம் ஊதி அரசருக்கெல்லாம் அரசரான கிறிஸ்து வரவேற்கப்பட்டார். பினாங்கு மறை மாவட்டத்தில் உள்ள அருங்கொடை ஜெபக்குழுத் தலைவர்கள் கொடிகளை ஏந்தி பவனியாக ஆலயப் பீடத்திற்கு முன் ஆரவாரத்துடன் வந்து நின்றனர்.
பினாங்கு மாநிலத்தின் 'காரிஸ்' (CHARIS) சமூகச் சேவைக் குழுவின் தலைவர் எஃடிலின் தே, எழுச்சி கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை நிகழ்ச்சியின் துவக்கத்தில் வரவேற்று ஆரம்ப ஜெபத்துடன் 2026 அருங்கொடை எழுச்சி கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
\"தூய ஆவியே வாரும் உமது மக்களைப் புதுப்பியும்\" (திருப்பாடல்.104/30) என்றக் கருப்பொருளின் அடிப்படையில் தூய ஆவியில் திருமுழுக்கின் அர்த்தமும் அதன் விவிலிய அடித்தளமும், அருட்சாதன அருட்கொடைகளின் மறுமலர்ச்சி, அனுதின வாழ்க்கையில் தூய ஆவியை வாழ்தல் ஆகிய தலைப்பில் முதலாவது இறை பகிர்வு நடைபெற்றது.
இதை அடுத்து, தூய ஆவியின் கொடைகள், இயற்கை திறமைகளைக் கண்டறிந்து அருட்கொடைகளைப் புரிந்து கொள்வதால், நற்செய்தி அறிவித்தலுக்கு இந்தக் கொடைகளைப் பயன்படுத்துதல், அருட்கொடைகளைத் தேர்ந்து தெளிதலும் முதிர்ச்சியும் ஆகியத் தலைப்புகளில் இரண்டாவது பகிர்வு இடம் பெற்றுள்ளது.
மதிய உணவுக்குப் பின் மூன்றாவதாகக் கத்தோலிக்க போதனை படி குணமளிப்பும், விடுதலையும், (உடல், உள்ளம், ஆன்மிகம் சார்ந்த குணமளிப்பு).,திரு அவையின் போதனைக்கு எதிரான தீவிரவாதம், ஆகிய தலைப்புகளில் இறைபகிர்வு நான்கு மொழிகளில் வெவ்வேறு அரங்குகளில் நடைபெற்றது.
பல்வேறு அரங்குகளில் இறைப்பகர்வு நடைபெற்று முடிந்த பின் மீண்டும் அனைவரும் ஆலயத்தில் ஒன்று கூடி நற்கருணை ஆராதனையும் குணமளிக்கும் ஜெபத்திலும் பங்கெடுத்தனர். பின்னர் விசுவாசிகள் ஆராதனைக்கு நற்கருணை மக்கள் மத்தியில் பவனியாகக் கொண்டு செல்லப்பட்டது.
இறுதியில் ஆயர் கர்தினால் செபஸ்தியன் பிரான்சிஸ் நடத்திய கூட்டுத் திருப்பலியில், எருசலேமில் இருந்து எம்மாவுஸ் நோக்கி சீடர்கள் அன்று பயணித்தனர். இப்போது எம்மாவூசிலேயே நாம் இருந்து விடாமல் மீண்டும் எருசலேம் நோக்கித் திரும்பிச் செல்ல வேண்டும். நம் வாழ்வின் முடிவில்லாத இறுதிக்கட்ட இலக்கு இதுவாக இருக்க வேண்டும் என தமது திருஉரையில் வலியுறுத்தினார்.
அருங்கொடை எழுச்சி கூட்டத்தில் அருட்பணியாளர் பீட்டர் அந்தோணி (கிறிஸ்து ஒளி ஆலயம் கெப்போங்), சிரில் மன்நாயகம் (குருத்துவக் கல்லூரி ஆன்மிக இயக்குநர்), அருட்பணியாளர் லூயிஸ் லோய்(புனித மரியாளின் தூய பெயர் ஆலயம்), திரு ஆல்பர்ட் லோ, சிஸ்டர் டுவாரின், சிஸ்டர் லூசினியா ஆகியோர் இறைபகிர்வு செய்தனர்.
இறை புகழ் ஆராதனையில் விசுவாசிகளின் பங்கெடுப்பினால் ஏராளமான ஞான செல்வங்களை, வரங்களை, குணமளிப்பைப் பெற்று ஆவியின் வல்லமையோடு விசுவாசிகள் வீடு திரும்பினர்.அருங்கொடை எழுச்சி கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்தியன் பிள்ளையின் நன்றி உரையோடு எழுச்சி கூட்டம் ஒரு நிறைவை எழுதியது.

